திருச்சி கல்லூரி விடுதி மாணவிகள் வாந்தி மயக்கம்: உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
திருச்சி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியின் விடுதி உணவருந்திய 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒவ்வாமையால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திரா காந்தி கல்லூரியில் பயிலும் விடுதி மாணவிகள் பலருக்கு தொடர்ந்து வாந்தி மயக்கம் இருப்பதும், அவர்கள் மருத்துவமனைக்கு சென்று உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்ததும் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தது.
க. சண்முகவடிவேல்
Advertisment
திருச்சியில் பிரபலமான மகளிர் கல்லூரியாக செயல்பட்டு வருவது இந்திரா காந்தி மகளிர் கல்லூரி. இக்கல்லூரியில் திருச்சி மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். கோட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட இந்திரா காந்தி கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள், கடந்த சனிக்கிழமை இரவு சப்பாத்தி சாப்பிட்டதாகவும், அன்றிலிருந்து அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று உபாதை தொடர்ந்து இருந்ததாகவும், இதனால் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்துக்கொண்டதாக மாணவிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், நேற்று இரவு கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தோசை சாப்பிட்ட பிறகு மீண்டும் அது போல் இருந்ததால் திருச்சி சிங்காரத் தோப்பில் உள்ள தனியார் (GVN) மருத்துவமனையில் 15 மாணவிகளும், எஞ்சிய மாணவிகள் 12 பேர், திருச்சி பாபு ரோட்டில் உள்ள தனியார் (GVN) மருத்துவமனையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர். புறநோயாளியாகவும், உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்ற 27 பேரும் இன்று காலை கல்லூரிக்கு திரும்பிய நிலையில், தற்போது புதிதாக பன்னிரண்டு மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Advertisment
Advertisements
இந்திரா காந்தி கல்லூரியில் பயிலும் விடுதி மாணவிகள் பலருக்கு தொடர்ந்து வாந்தி மயக்கம் இருப்பதும், அவர்கள் மருத்துவமனைக்கு சென்று உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்ததும் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிவர, இதுகுறித்து அறிந்த திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்திரா காந்தி கல்லூரிக்கு சென்று விடுதியில் உள்ள உணவகத்தை ஆய்வு செய்தனர்.
கல்லூரியில் செயல்பட்டு வந்த விடுதி மாணவியரின் உணவகம் முறையாக பராமரிக்கப்படாமலும், ஒவ்வாமைக்கு வித்திடும் விதத்தில் இருந்ததால் அந்த விடுதியின் உணவகத்தை பூட்டி சீல் வைத்தனர். உணவு மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் இறுதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சியின் பிரபல மகளிர் கல்லூரியான இந்திரா காந்தி மகளிர் கல்லூரியின் விடுதி உணவகத்தில் உணவருந்திய 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒவ்வாமையால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil