திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன் மகன் பார்த்திபன். இவர் பொறியியல் பட்டதாரி. இவர் சொந்தமாக ஜே.சி.பி வாகனத்தினை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது வாகனத்தினை விராலிமலையைச் சேர்ந்த இவரது நண்பர் ரங்கசாமி என்பவரிடம் கடந்த 2001-ம் ஆண்டு வாடகைக்கு விட்டுள்ளார்.
மேற்படி, ரங்கசாமி பார்த்திபனின் ஜே.சி.பி வாகனத்தை அவருக்கே தெரியாமல் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். இதனை அறிந்த பார்த்திபன், ரங்கசாமி மீது கடந்த 19-3-2022 அன்று மீது புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் புத்தாநத்தம் காவல்துறையினர் பார்த்திபனின் ஜே.சி.பி வாகனத்தை கண்டுபிடித்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு உடைந்தது; ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு; மறுதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடிவு
மணப்பாறை நீதிமன்றத்தில் இருந்த தனது ஜே.சி.பி இயந்திரத்தை திரும்பப்பெற இயலாத பார்த்திபன் உயர் நீதிமன்றத்தினை நாடி வழக்கு தொடுத்துள்ளார். அதன் பேரில் உயர்நீதிமன்றம் பார்த்திபனிடம் 5 லட்ச ரூபாய்க்கு சொத்து மதிப்பு சான்றிதழை மணப்பாறை நீதிமன்றத்தில் வழங்கிவிட்டு இயந்திரத்தை பெற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே பார்த்திபன் சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 06-07-2023 அன்று விண்ணப்பம் செய்து அந்த மனுவானது, கண்ணூர் கிராம நிர்வாக அலுவலரிடம் வரப்பட்டுள்ளது. இதனை அறிந்த பார்த்திபன் நேற்று 24-07-23 காலை 10 மணி சுமாருக்கு கண்ணூர் கிராம நிர்வாக அலுவலர் அமீர்கானை சந்தித்து சொத்து மதிப்பு சான்றிதழ் பெற பரிந்துரை செய்யக் கோரியுள்ளார்.
அதற்கு கண்ணூர் வி.ஏ.ஓ அமீர்கான் ரூ.6,000 லஞ்சமாக கொடுத்தால் தான் சொத்து மதிப்பு சான்றிதழ் கிடைப்பதற்கு பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார். பார்த்திபன் கேட்டுக் கொண்டதன் பேரில் ஆயிரம் ரூபாய் குறைத்து கொண்டு ரூ.5,000 கொடுத்தால் மட்டுமே சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்ய முடியும் என்று வி.ஏ.ஓ அமீர்கான் கட்டாயமாக கூறியுள்ளார்.
இதனையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத பார்த்திபன் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்ததன் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீசாருடன் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பெயரில் பார்த்திபன் கண்ணூர் ஊராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இன்று 25.07.23 காலை சுமார் 11 மணியளவில் சென்று வி.ஏ.ஓ அமீர் கானிடம் பார்த்திபன் ரூ.5,000 ரொக்கத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வி.ஏ.ஓ. அமீர்கானை லஞ்சம் வாங்கும்போது கையும் களமாக பிடித்தனர்.
கண்ணூர் வி.ஏ.ஓ., அமீர்கான் லஞ்சம் பெற்றதையடுத்து லஞ்ச வழக்கில் அவரை கைது செய்த லஞ்ச ஓழிப்புத்துறை டி.எஸ்.பி.,மணிகண்டன் தலைமையிலான போலீஸார் மேற்கொண்டு விசாரணைக்காக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil