திருச்சி மாநகரில் கலந்து கொள்ள நாட்களாக மின் விநியோகம் சீராக இல்லை. இதனால் போக்குவரத்து சிக்னல்கள் பாதிக்கப்படுவதால் திருச்சி மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு விரைவில் தீர்வு காண மக்கள் நீதி மய்யம் நிர்வாகி கிஷோர் குமார் காவல் ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது;
திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் செயல்படும் திருச்சி மாநகர காவல்துறை சிறப்பாக கையாண்டு வருகிறது.
அதேபோல், திருச்சி மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து காவலருக்கு உற்ற தோழனாக இருப்பது என்னவோ போக்குவரத்து சிக்னல்கள் தான். திருச்சி மாநகரில் சமீப நாட்களாக ஏற்படும் மின்தடையால் இந்த சிக்னல்கள் இயங்க முடியாமல் போவதால், போக்குவரத்தை சரிசெய்ய போக்குவரத்து காவலர்கள் பாடாய்படுகிறார்கள்.
மேலும், வாகன ஓட்டிகளும் செய்வதரியாது வாகனத்தை இயக்குவதால் விபத்து ஏற்படுகிறது. இன்னும் சில நாட்களில் பள்ளி தொடங்கிவிட்டால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
திருச்சி மாநகரில் மொத்தமாக மாம்பழச்சாலை சிக்னலில் தொடங்கி, காவிரி பால சிக்னல், தெப்பக்குளம் சிக்னல், பால்பண்ணை, தலைமை தபால் நிலையம், கோர்ட், புத்தூர் நான்கு ரோடு, கோஹினூர், அறிவாலயம் சிக்னல் என மொத்தம் பத்து போக்குவரத்து சிக்னல்கள் தான் உள்ளன.
எனவே, திருச்சி மாநகர காவல் ஆணையர் உடனடியாக திருச்சி மாநகரில் இயங்கும் போக்குவரத்து சிக்னல்களை மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டாலும் இயங்கும் வகையில் மாற்றியமைத்து தரம் உயர்த்த வேண்டுமாய் மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் என வழக்கறிஞரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான கிஷோர்குமார் காவல் ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தி: க. சண்முகவடிவேல்