திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 1-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்பாளும், தாயுமானவர் (சிவபெருமானும்) காமதேனு, ரிஷபம், யானை, தங்ககுதிரை, நந்திகேசர், கைலாசபர்வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வந்தனர்.
தொடர்ந்து 5-ம்தேதி செட்டிப்பெண் பிரசவம் பார்த்தல் வைபவமும், 6-ம் தேதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு தேரில் மட்டுவார் குலழம்மை தாயார் எழுந்தருளினார். முன்னதாக சண்டிகேஷ்வரர் பரிவார மூர்த்திகள் சிறிய தேரில் சென்றன.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ”ஓம் நமச்சிவாய” என்ற பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். மலைக்கோட்டை தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக, திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி கோவில் சித்திரைத் தேர் திருவிழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான, அன்பில் மகேஸ் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், கிழக்கு மாநகரச் தி.மு.க. செயலாளர் மு.மதிவாணன், பகுதிச் செயலாளர் மோகன், மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி மற்றும் மலைக்கோட்டை சுவாமி தாயுமானவர் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கருணாநிதி, ஸ்ரீதர் கோவிந்தராஜ், கலைசெல்வி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்