வரி வசூலில் முறைகேடு.. மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் டிஸ்மிஸ்: ஆட்சியர் அதிரடி

மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் விக்னேஷ்வரன் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது நிரூபணம் ஆன நிலையில் அவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வரி வசூலில் முறைகேடு.. மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் டிஸ்மிஸ்: ஆட்சியர் அதிரடி

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது மல்லியம்பத்து ஊராட்சி. பொதுவாகவே ஊராட்சி நிர்வாகங்களில், வரி வசூல், கட்டட வரைபட அனுமதி (பிளான் அப்ரூவல்) உள்ளிட்டவைக்கான கட்டணங்களை செலுத்தினால் அவற்றுக்கான ரசீதுகள் கணினி மூலமாக வழங்குவதில்லை. நேரடியாக கட்டணங்களை செலுத்தி ஊராட்சி தலைவர்கள், எழுத்தர்கள் வைத்துள்ள தனித்தனி ரசீது புத்தகங்களைக் கொண்டு வரி வசூல் செய்ததற்கான ரசீதுகள் வழங்கி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன் மக்களிடம் வசூல் செய்யப்பட்ட வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் பல வகை வரி தொகைகளை ஊராட்சி நிதியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆட்சியருக்கு அளித்த புகாரின் பேரில் ஆட்சியர், விக்னேஸ்வரனுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், 'மல்லியம்பத்து ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்ற நாளிலிருந்து செலவுச் சீட்டுகள் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும், போலியான ரசீதுகள் மூலம் ரூ.74 லட்சம் கையாடல் செய்து முறைகேடு நடந்துள்ளது. ஊராட்சித் தலைவராக பதவி ஏற்றபோது எடுத்த உறுதிமொழியினை மீறி அரசுக்கு எதிராக செயல்பட்டு உள்ளதால் இக்குறைகளுக்கு விளக்கம் கோரப்படுகிறது. 15 தினங்களுக்குள் உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும், தவறினால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 203-ன் கீழ் ஊராட்சி தலைவரின் செக் பவர் பறிக்கப்பட்டது. உரிய விளக்கம் அளிக்காததால் 205-ன் கீழ் ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று கூறப்பட்டது. விக்னேஷ்வரனிடம் 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவு 205 (1) ன் கீழ் விளக்கம் கோரப்பட்டு 4 மாதமாகியும் உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்கப்பட வில்லை. அதனைத் தொடர்ந்து ஆட்சியர் உத்தரவுப்படி கடந்த மாதம் 7-ம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி உறுப்பினர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடத்திய அறிக்கையை ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகர் ஆட்சியரிடம் சமர்ப்பித்தார்.

Advertisment
Advertisements

இதைத் தொடர்ந்து, மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரனுக்கு ஆட்சியர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது, ''ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்தும் அதன் அறிக்கையை பரிசீலனை செய்ததிலும் மல்லியம்பத்து ஊராட்சி மன்றத் தலைவர் நிதி முறைகேடுகள் மற்றும் பொறுப்பிலிருந்து செயல்படாமலும் குறைபாடுகள் வெளிப்படையாக நிரூபணமாகியுள்ளதால் அவர் தொடர்ந்து அந்த பதவியில் இருப்பது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திற்கு புறம்பானதாகவும், பொது மக்களுக்கும் பொது நிதிக்கும் அரசு நிதிக்கும் தொடர்ந்து ஊறு விளைவிக்கும் விதமாக அமையும் என்பதால் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பொது நலன் கருதியும் திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த மல்லியம்பத்து ஊராட்சி மன்றத்தலைவர் விக்னேஷ்வரன் என்பவரை 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205, உட்பிரிவு 11-ன்படி, 15.11.2022 முதல் மல்லியம்பத்து ஊராட்சி மன்றத்தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்'' என்று உத்தரவிட்டுள்ளார்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: