திருச்சி மாரீஸ் திரையரங்கம் அருகேயுள்ள சுமார் 157ஆண்டுகள் பழைமையான ரயில்வே மேம்பாலம், மிகவும் குறுகலாகவும், உயரமாகவும் இருப்பதால் அதை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் ஒருபகுதியில் மழையால் மண் சரிந்ததால் பாலம் வலுவிழந்தது.
இதனால் கனரக வாகனங்கள் பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்துக்காக அந்தப் பாலம் ரூ.2.90 கோடியில் சீரமைக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு புதிய பாலம் அமைப்பது குறித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ரூ.35 கோடிக்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியை உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு நிதியில் மேற் கொள்ள நகராட்சி நிர்வாக ஆணையம் மாநகராட்சிக்கு அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, திருச்சி கோட்ட தெற்கு ரயில்வேயும், திருச்சி மாநகராட்சியும் இணைந்து புதிதாக கோட்டை ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை தொடங்க உள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ.35 கோடிக்கு கடந்தாண்டு ஜூலை ஒப்புதல் வழங்கியது. பின்னர் ரூ.34.10 கோடியில் கோட்டை ரயில்வே மேம்பாலம் புதிதாக கட்ட மாநகராட்சி டெண்டர் விடுத்து, இதைத்தொடர்ந்து ரூ.34.10 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜையும் நடைபெற்றது. புதிதாக கட்டப்பட உள்ள மேம்பால பணிகள் விரைவாக முடிப்பதற்காக மேம்பாலம் மூடப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சியின் முக்கியமான மேம்பாலமாக அமைவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக போக்குவரத்து காவல்துறையும், மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து இரு சக்கர வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாமா அல்லது பணிகளை விரைந்து முடிப்பதற்காக முழுவதுமாக மூடப்படலாமா என்ற ஆலோசனையை நடத்தி வருகின்றனர்.
மாரீஸ் மேம்பாலம் முழுவதுமாக மூடப்படும் போது திருச்சி மாநகர பொதுமக்கள் மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகுவர். எனவே, இதற்கான மாற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“