/indian-express-tamil/media/media_files/2025/07/24/trichy-waqf-farmer-protest-2025-07-24-19-35-51.jpeg)
திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, பல ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை வாரிசு உரிமை அடிப்படையில் சாகுபடி செய்து வருகிறார்கள்.
அந்த நிலங்களுக்கு வஃக்பு வாரியத்தினர் உரிமை கோரி, அதனை வருவாய் துறையினருடன் இணைந்து இன்று கையகப்படுத்த முயற்சி செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிலத்தை கையகப்படுத்த முயன்றவர்களை முற்றுகையிட்டும், அந்த நிலங்களை சாகுபடி செய்துவரும் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி பகுதியில் 22 குடும்பத்தை சேர்ந்தவர்கள் குத்தகை மற்றும் பரம்பரையாக அனுபவித்து வருபவர்களும், நில உரிமையாளர்களின் வாரிசு என கூறப்படுபவர்களும் 31.60 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த இடம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுக்கா வரிசை ராவுத்தர் சத்திரம் மற்றும் தண்ணீர் பந்தல் வஃக்பு சார்பில் உரிமை கோரும் இடமான பாப்பாக்குறிச்சி கிராம சர்வே எண் 198 ல் உள்ள 31.60 ஏக்கர் இடம் திருச்சி வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானது என உரிமைக்கோரப்பட்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த 2024 ஆம் ஆண்டு அதை உறுதிபடுத்தி தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு அளந்து ஒப்படைக்குமாறு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பாப்பாக்குறிச்சி பகுதியில் உள்ள அந்த விவசாய நிலத்தை அனுபவித்து வருபவர்களும் நில உரிமை கோருபவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருவெறும்பூர் தாலுகா அதிகாரிகள் சார்பில் பல்வேறு கட்ட சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் இன்று வருவாய் துறையினர் மூலம் வஃக்பு வாரிய நிர்வாகிகள் நீதிமன்ற உத்தரவுப்படி சென்று, அந்த இடத்தை அளந்து எடுப்பதற்கு திருச்சி ஆர்.டி.ஓ அருள், திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம் தலைமையில், கிராம உதவி அலுவலர்கள், நில அளவையர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது அந்த நிலத்தை சுமார் 100 ஆண்டுகளாக அனுபவித்து வந்தவர்களும், நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தவர்களும் சொக்கலிங்கம் என்பவர் தலைமையில், நிலத்திற்கு தானே உரிமையாளர் வாரிசு என கூறும் முகமது இலியாஸ் மற்றும் அவரது உறவினர்களும் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து ஏ.எஸ்.பி அரவிந்த்பனாவத் மற்றும் ஏ.டி.எஸ்.பி மதியழகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. சாலையில் உருண்டு புரண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட குத்தகைதாரர் தரப்பினை சேர்ந்த 17 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
பின்னர் திருவெறும்பூர் வட்டம் சார்பாக நில அளவையர் சுமித்ரா தலைமையில் இடத்தை அளக்கும் பணியை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, வஃக்பு வாரியத்தை சேர்ந்தவர்கள், இந்த நிலம் தங்களது வஃக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலம், இந்த இடத்தில் யாரும் அனுமதி இன்றி நுழையவோ, ஆக்கிரமிக்கவோ கூடாது மீறினால் காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அதிரடியாக விளம்பர பதாகைகளை நட்டுள்ளதுடன், அந்த பகுதியில் கம்பி வேலியையும் ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் அடைத்து உள்ளனர்.
இதனால் காலை 9 மணியில் இருந்து மாலை வரை அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான விவசாயிகளும், போலீஸாரும் சம்பவ இடத்தில் கூடியதால் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்தநிலையில் நிலம் குத்தகைதாரர்கள் எனக் கூறப்படும் தரப்பை சேர்ந்த சொக்கலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது; நாங்கள் நான்கு தலைமுறைகளாக விவசாயம் செய்து கொண்டு வருகிறோம். ஆரம்பத்தில் 1982ல் இருந்து இந்த வயல் வரிசை ராவுத்தர் வாரிசு இல்லாத காரணத்தினால் கவர்மெண்ட் லேண்ட்டானது. பின்னர், சீலிங் ஆக்ட் மூலமாக கவர்ன்மெண்ட் அந்த நிலத்தை எங்களுக்கு ஒப்படைத்து விட்டது. நாங்கள் இதுவரை குத்தகை ரசீது கட்டி வருகிறோம், நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம், குத்தகை பதிவேடு எங்களுடைய பெயர்களில் இருந்து வருகிறது.
இதற்கிடையில் நாங்கள் தான் குத்தகைதாரர்கள் என்று எங்கள் உரிமையை நிலை நாட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் இவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று அதாவது இடத்தை ஆக்கிரமிப்பு செய்கிறவர்கள் என்று அதிகாரிகள் அனைவரும் பொய்யான சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
அறிவிப்பு கொடுக்காமல் எங்களை ஆக்கிரமிப்பு செய்து ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வது தவறு, நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடி வந்துள்ளோம் அவர்கள் வாங்கிய நீதிமன்ற உத்தரவில் காளிமுத்து அவர்களுடைய இடத்திற்கு மட்டும் தீர்வு பெற்று வந்துள்ளனர்.
நாங்கள் விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம், இப்போது வந்து நீங்கள் இடத்தை அளப்பது தவறு எங்களிடம் வந்து பிரச்சனை செய்து வருகிறார்கள். இவற்றில் காளிமுத்து அவருடைய இடம் ஒரு ஏக்கர் 21 சென்ட் இடத்தை மட்டுமே அளக்க முடியும் மற்ற இடங்களை அளக்க முடியாது. அப்படி இல்லாமல் அளக்கும் பட்சத்தில் எங்களுடைய இடத்தை தாண்டி அவர்கள் முள்வேலி அமைப்பதால் நாங்கள் மற்ற இடங்களுக்கு செல்ல முடியாது. அதனால் எல்லா இடத்தையும் அளந்து உள்வேலி அமைக்க கூடாது, எங்களுடைய இடத்தை அளக்க கூடாது, நாங்கள் இந்த இடத்தில் விவசாயம் செய்து வருவதால் விவசாயத்தை காக்க வேண்டும்.
விவசாயத்தை அழிக்க நீங்கள் எப்படி வந்தீர்கள், விவசாயத்தை அழிக்கும், அரசு அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். நாங்கள் விவசாயி இல்லை என்று சொல்லி எந்த அதிகாரிகள் சொன்னாலும் அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். நாங்கள் வருடம், வருடம் குத்தகைக்கான பணத்தை கட்டி வருகிறோம், எங்கள் விவசாயத்தை அழிக்க நினைக்கிறார்கள் என்றார்.
நிலம் உரிமை கோரும் நபர்கள் சார்பாக முகமது இலியாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; நாங்கள் முப்பது வருடமாக வசித்து வருகிறோம். எங்களுடைய சொந்த இடம் இது. இந்த இடத்திற்கு முன்னால் இருந்தவர்கள் வாரிசு யாரும் இல்லை. அதற்கு டி.ஆர்.ஓ சான்றிதழ் வழங்கி உள்ளார்.
நாங்கள் உண்மையான வாரிசு எங்களிடம் அனைத்து சான்றிதழ்களும் உள்ளது, நாங்கள் உயிருடன் இருக்கும் பொழுது எப்படி எங்களுடைய இடத்தை பட்டா மாறுதல் செய்ய முடியும். பட்டாவில் எங்களுடைய பெயர்கள் அனைத்தும் உள்ளது அதை மீறும் பட்சத்தில் நாங்கள் கடுமையான போராட்டத்தை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.
வஃக்பு வாரிய இடம் சர்ச்சையால் திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி பகுதியில் காலை முதல் கடுமையான பரபரப்பு நிலவியது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.