/indian-express-tamil/media/media_files/2025/04/24/H3uExU8yD7pGbVL6Bxtl.jpeg)
திருச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கு பெற்ற ரயில்வே குறைபாடுகள், பணிகள் தொடர்பான கலந்தாய்வுக்கூட்டம் தென்னக ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவிக்கையில்;
திருச்சியில் இருந்து எர்ணாகுளம், பெங்களூர், திருப்பதி விரைவு ரயில் வண்டிகள் இயக்க வேண்டும் என ரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். 3 ரயில்களில் ஏதாவது ஒரு ரயில் தான் தற்போது வழங்க முடியும் என்று கூறினர். எனவே, பொதுமக்களிடம் ஆலோசனை மேற்கொண்டதில் திருச்சி - திருப்பதி ரயில் வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனை, வி.ஐ.டி கல்லூரிகளுக்கு அதிகமாக மக்கள் செல்கின்றனர். எனவே, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்.
திருச்சி - பெங்களூர் ரயில் ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனால், அதன் கட்டணம் அதிகம். எனவே, சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில் ரயில் இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்துள்ளேன்.
திருச்சி ரயில்வே உயர்மட்டபாலம் மேலகுமரேசபுரம், மேலகல்கண்டார்கோட்டை, ஸ்ரீரங்கம் ரயில்வே பகுதியில் உயர் மட்ட பாலம், இனாம்குளத்தூர் ரயில்வே உயர்மட்ட பாலம், உடையான்பட்டி பாலம் ஆகிய அனைத்து பாலங்களுக்கும் 15 ஆண்டாக பொதுமக்களால் விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைக்கு தற்போது ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
மஞ்சத்திடல், அரியமங்கலம் பகுதிகளில் மெமோ ரயில்வே செட் வரவுள்ளது. எனவே, அந்த பகுதியில் ரயில்வே வாகன சுரங்கப்பாதை ஆகியவைகளுக்கு மெமோ செட் பணி வேலையுடன் சேர்த்து பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் நின்று செல்வதற்கு ஒப்புதல் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதுபோல் மேலும் கூடுதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்பதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை முதல் பிளாட்பாரத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். புதுக்கோட்டை, கந்தவர்க்கோட்டை போன்ற இடங்களில் மிகவும் பின் தங்கிய பகுதிகள் இருப்பதால், தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும், என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்.
முதியோர் மற்றும் ஊடக செய்தியாளருக்கு 50 சதவீதம் கட்டணம் சலுகையில் இருந்தது கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பொன்மலை ஜி கார்னர் பகுதியில் சர்வீஸ் ரோடு தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து ஒன்றிய நெடுஞ்சாலை அமைச்சரிடமும் மற்றும் ரயில்வே அதிகாரிகளிடம் மாவட்ட நிர்வாகம் அது குறித்து பேசி விரைவில் சர்வீஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சியிலிருந்து புறப்படும் ரயில்கள் நீட்டிப்பதற்கு எந்த தடையும் கிடையாது. திருச்சியில் இருந்து நீட்டிக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.
திருச்சி மாநகர் பகுதி உறையூரில் குடிநீர் பிரச்சனையால் சிறுமி இறந்தது குறித்து உடல் உபாதை காரணமாக நாட்டு வைத்தியம் கொடுத்ததினால் அந்த சிறுமியை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த பின் குழந்தை இறந்துள்ளது. இதில் பல அரசியல் உள்ளது.
மெட்ரோ ரயில் தொடர்பாக தமிழக அரசு மதுரையில் கோயம்புத்தூர் கொடுக்கப்பட்டிருக்கிறது. திருச்சிக்கான எந்த திட்டமும் இல்லை என்பது குறித்து அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்திற்கு எந்த ஒப்புதல் இதுவரை வழங்கப்படவில்லை. அப்படி நடக்கும் பட்சத்தில் திருச்சிக்கான மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என உறுதியாக தெரிவித்தார்.
மாரிஸ் தியேட்டர் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலம் திட்டம் விரைவில் முடியும், மாநில அரசு அதை விரைவுப்படுத்தி வருகிறது. ரயில்வே பணிகளை பொறுத்தவரை தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குள் முடித்து தருவதாக கூறியிருந்தனர். நடைபெற்ற ரயில்வே கூட்டத்தில் கேட்டபோது மே மாதத்திற்குள் விரைவில் முடிந்துவிடும் என தெரிவித்துள்ளனர். இதேபோல் அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் நடைபெற்றிருக்கும் ரயில்வே பாலமும் விரைவில் முடியும். இவ்வாறு துரை வைகோ எம்.பி தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.