/indian-express-tamil/media/media_files/2025/09/15/durai-vaiko-trichy-mdmk-conference-2025-09-15-20-18-45.jpg)
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா மற்றும் ம.தி.மு.க மாநாடு, திருச்சி சென்னை சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திடலில் இன்று (செப்டம்பர் 15) நடைபெற்றது.
இந்த மாநாட்டில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் கட்சியின் ஆட்சி மன்ற குழு செயலாளருமான டாக்டர்.சி.கிருஷ்ணன் தலைமை ஏற்றார், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் டி.டி.சி.சேகரன் அனைவரையும் வரவேற்றார். ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் டாக்டர்.ரொஹையா ஷேக் முகமது கட்சியின் கொடியை ஏற்றினார். பேரறிஞர் அண்ணா சுடரை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் கு.சின்னப்பா ஏற்றி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் மாநாட்டை தொடங்கி வைத்தார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, திராவிட இயக்க வரலாற்று கண்காட்சியை திறந்து வைத்தார்.
அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ரோவர்.வரதராஜன் திராவிட இயக்க மூவர் படங்களை திறந்து வைத்தார். அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் பெரம்பலூர் துரைராஜ் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தி, பேரறிஞர் அண்ணா படத்தை திறந்து வைத்தார். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், மொழிப்போர் தியாகிகளின் படங்களை திறந்து வைத்தார்.
ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மாநாட்டு நிறைவு பேருரையாற்றினார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
இந்த மாநாட்டில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ பேசியதாவது;
மகாத்மா காந்தியின் நடைபயண அரசியலை முன்னெடுத்தவர், தனது ஆயுள் காலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களுக்காக சிறை தண்டனை அனுபவித்தவர் வைகோ. பட்டம், பதவியை அனுபவிப்பதற்காகவும், பணம் பொருள் ஈட்டுவதற்காகவும் நாங்கள் அரசியலுக்கு வரவில்லை.
கூட்டாட்சி, பெண் சமத்துவம், இருமொழி கொள்கை, சமூக நீதி உள்ளிட்ட கோட்பாடுகளை நடைமுறைக்கு கொண்டுவந்து, தமிழகத்தின் வளர்ச்சிப் பாதைக்கு வெளிச்சம் பாச்சியவர் அறிஞர் அண்ணா.
ம.தி.மு.க தொடங்கப்பட்டது முதல் அண்ணாவின் பிறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடும் இயக்கம் ம.தி.மு.க தான். ஆங்கிலத்தை தவிர்த்துவிட்டு இந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிகளை உலக தொடர்பு மொழியாக பயன்படுத்த முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என பேசிவருகிறார்.
தமிழ்நாட்டின் கல்வி, பேரிடர் நிவாரணம், உள்கட்டமைப்பு மேம்பாட்டு உள்ளிட்டவற்றுக்கான நிதியை தமிழகத்திற்கு கொடுக்க ஒன்றிய பா.ஜ.க மறுத்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல எதிர்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இதே நிலை தான். இந்தியாவின் பன்முகத்தன்மையை பா.ஜ.க அரசு சிதைக்க பார்க்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி 30நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டால், குற்றம் நிருபிக்கப்படும் முன்பே அவரது பதவியை பறிக்கும் வகையில் சட்டதிருத்த மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. ஜனநாயகத்தை படுகொலை செய்யும் இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன்.
தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு தண்டணைக்கு உள்ளாக்கப்படுவதும், லட்சகணக்கான ரூபாய் அபராதத்திற்கும் உள்ளாக்கப்படுவதையும் தடுக்க வேண்டும்.
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ! நானும், ம.தி.மு.க.,வும் வீழமாட்டோம். பைத்தியக்கார பயல்களா எங்களை யாரும் வீழ்த்த முடியாது. அண்ணா வழியில் பயணிப்போம். இவ்வாறு துரை வைகோ உரையாற்றினார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us