/indian-express-tamil/media/media_files/2025/03/24/zKlVg9YOi5KUGwhnSXVM.jpg)
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ம.தி.மு.க முதன்மை செயலாளருமான துரை வைகோ, திருச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
திருச்சியில் நேற்று இரவு பா.ஜ.க. நடத்திய பொதுக்கூட்டத்தில், செய்தி சேகரிப்பதற்காக சக பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்களுடன் தினகரன் புகைப்படக் கலைஞர் சுந்தர், சன் தொலைக்காட்சி ஊடகவியலாளர் முஜாஹிதீன் இஸ்லாம் ஆகிய இருவரும் சென்றுள்ளனர்.
பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிக்கொண்டிருந்தபோது, நாற்காலிகளில் இருந்து சிலர் எழுந்து போய்விட்டதாகவும், அப்போது காலியாகக் கிடந்த நாற்காலிகளை இவர்கள் படம் பிடிக்க முயன்றதாகவும் தெரிகிறது.
இதை அறிந்த பா.ஜ.க.வினர் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், தினகரன் புகைப்படக்காரர் சுந்தர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சன் தொலைக்காட்சி செய்தியாளர் முஜாஹிதீன் இஸ்லாம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்கப்படுகின்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் போதெல்லாம், மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் இயக்கத் தந்தை வைகோ கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அந்த வகையில், என்னுடைய திருச்சி தொகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இருவர், பா.ஜ.க. வினரால் தாக்கப்பட்டது அறிந்து வேதனையுற்றேன்.
ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள பா.ஜ.க. கட்சியினர், பொதுக்கூட்டம் நடந்த ராணுவ மைதானத்திற்குள்ளேயே பத்திரிகையாளர்கள் இருவரை கண்மூடித்தனமாகத் தாக்கியதைக் கண்டிக்கின்றேன். தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க-வினரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். பொதுவாழ்வில் ஈடுபடுகின்ற என்போன்றவர்களிடம், பலமுறை சில சிக்கலான கேள்விகளைக் கூட பத்திரிக்கை நண்பர்கள் கேட்பார்கள். அதற்கு பொறுமையாக பதில் சொல்லிவிட்டுத்தான் கடக்கின்றோம்.
கடந்த வருடம் மார்ச் 21-ஆம் தேதி நான் மறுமலர்ச்சி தி.மு.க-வின் திருச்சி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, முதல் முறையாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தேன். அப்போது என்னிடம் பத்திரிகை நண்பர் ஒருவர், அவருக்கு ஏற்ற ஒரு கேள்வியைக் கேட்டார். அப்போது எங்கள் கட்சித் தோழர்கள் சிலர் அவரைப் பார்த்து கூச்சலிட்டனர். அந்த இடத்திலேயே எங்கள் கட்சிக்காரர்களைக் கண்டித்துவிட்டு, அவர் கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதில் சொன்னேன்.
இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம், அரசியல் பொதுவாழ்வில் உள்ள சகோதரர் அண்ணாமலை போன்றவர்கள் பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதற்கெல்லாம் யாரும் கோபம் கொள்வதில்லை. அரசியல் கட்சிகளுக்கும், கட்சித்தலைவர்கள் பலருக்கும் வேறு, வேறு பார்வை உண்டு. அப்படித்தான், ஒவ்வொரு பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் ஒரு பார்வை உள்ளது. அந்தப்பார்வையில் அவர்கள் படம் எடுக்கின்ற கடமையில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதை அமைதி வழியில் எதிர்கொள்வதைத் தவிர்த்து, இப்படி அராஜகமாக நடந்து கொள்வது நாகரிகமானது அல்ல.
ஆகவே, இந்த வன்முறைச் செயலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்” என்று திருச்சி தொகுதி எம்.பி துரை வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, பா.ஜ.க கூட்டத்தில் செய்தியாளர்களை தாக்கிய பா.ஜ.க-வினர் மீது கே கே நகர் காவல் துறையினர் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை வைத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.