சக்தி ஸ்தலங்களுள் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் வந்து செல்லும் பக்தர்களை குறைந்த நேரத்தில் அம்மனை தரிசிக்க அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றி குறுக்கு வழியில் பணத்தை பெற்றுக் கொண்டு பக்தர்களை அம்மனை தரிசிக்க அழைத்து செல்லும் தரகர்கள் கோயிலை சுற்றி நிறைய பேர் உண்டு. அப்படி அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட தொழில் போட்டியால் நேற்று இரவு வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்த விவரம் வருமாறு;
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ். கல்லுக்குடியைச் சேர்ந்தவர் பாபு வயது 28. வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருந்த பாபு கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சொந்த ஊரான எஸ்.கல்லுக்குடிக்கு வந்து சமயபுரத்தில் பூ கட்டும் வேலை மற்றும் சமயபுரம் கோயிலுக்கு வரும் பக்கதர்களிடம் இடைத் தரகராக பணத்தைப் பெற்றுக் கொண்டு சமயபுரம் மாரியம்மனை பக்தர்கள் குறுக்கு வழியில் சாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்லும் வேலையை செய்து வந்துள்ளார்.
அதேபோல் சமயபுரம் அருகே வி.துறையூரைச் சேர்ந்த கடலை வியாபாரி சுள்ளான் மற்றும் அவரது சகோதரர் கணேஷ் இவரும் பக்தர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் பக்தர்களை பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்ய கூட்டி செல்வதில் பாபுவும், சுள்ளான் மற்றும் அவரது சகோதரர் கணேசனும் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை அரசு மதுபான கடை பாரில் பாபு மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு சுள்ளான் அவரது 7 சகோதரர்களும் மது அருந்த வந்துள்ளனர் அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுள்ளான் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் சேர்ந்து மறைத்து வைத்திருந்த அறிவாளால் பாபுவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக பயணிகள் ஆட்டோவில் ஏற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளான கடலை கணேசன் சுள்ளான் வெங்கடேஷ் விநாயகம் உள்ளிட்ட 4 பேரை காவல்துறை யினர் தேடிவருகின்றனார்.சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் இரண்டு அரசு மதுபான கடைகள் பாருடன் உள்ளதால் அடிக்கடி தகராறு ஏற்படுவதும் வழக்கமாகிவிட்டது, மேலும் மது போதையில் சிலர் மதுபான ஊழியர்களை அறிவாளால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெட்டியதும், அப்பகுதியில் அடிக்கடி வழிபறி நடப்பதும் குறிப்பிடத்தக்கது.
அம்மனை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களை சூழ்ந்து கொள்ளும் தரகர்கள் கோயிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி பக்தர்களிடம் நிறைய பணம் பெற்றுக் கொண்டு அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்து வரும் தருகர்களை அறவே ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பக்தர்கள் எழுப்பியுள்ளனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“