திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் துப்பாக்கித் தொழிற்சாலை நிர்வாகம் கேரள காவல்துறைக்கு டிரிக்கா (திருச்சி கார்பைன்) என்ற பெயரிலான துப்பாக்கிகளின் (சப்மெஷின் கன்) முதல் தொகுப்பை வழங்கியது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அட்வான்ஸ்டு வெபன்ஸ் மற்றும் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட்டின் ஒரு பிரிவான திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஸ்ரீவஸ்தவா, பொது மேலாளர்கள் வி. குணசேகரன், எஸ். கிருஷ்ணசாமி ஆகியோர் 92 துப்பாக்கிகளை கேரள காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த துப்பாக்கியான டிரிக்கா உள்நாட்டிலேயே ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் துப்பாக்கித் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது. துப்பாக்கி தொழிற்சாலையில் நடத்தப்பட்ட வெற்றிகரமான சோதனைகளின் அடிப்படையில் 92 டிரிக்காக்களுக்கான ஆணையை கேரள காவல்துறை வழங்கியது.
டிரிக்கா என்பது ஒரு வழக்கமான சப்மெஷின் கன் அளவைக் கொண்டுள்ளது. இது 7.62*39 மி.மீ. காலிபர், 3.50 கிலோ எடை, 175 மீட்டர் வரை சுடும் திறன் கொண்டது.
இந்த வகையான துப்பாக்கிகள், காலாட்படை போர் வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், பராட்ரூப்பர்கள், காவல்துறையினர், விமான நிலையங்கள், சிறப்பு நடவடிக்கைப் படைகள் போன்ற உயர் பாதுகாப்பு போன்ற பாதுகாப்பு வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்ட விரைவான தாக்குதலுக்கான சிறிய இலகுரக, தானியங்கி ஆயுதமாகும்.
தற்போது அசாம் வனத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடமிருந்து டிரிக்கா பணி ஆணையை திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.