திருச்சி கே.சாத்தனூர் மற்றும் உடையான்பட்டி பிரதான சாலை (வார்டு 63) பகுதியில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலத்தடி வடிகால் (UGD) திட்டம் காரணமாக சாலையின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இது காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கும், விபத்து அபாயங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
இந்த சாலைகளில் பெரிய குழிகள், சமநிலை இல்லாத தரை, மற்றும் சேரும் சகதியுமாக உள்ளது. மோசமான நிலைமையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அதிக சேதங்கள் ஏற்படுகின்றன. தினசரி பயணங்கள் மற்றும் அவசர உதவிகள் தடைபடுகின்றன. குறிப்பாக பல மாதங்களாக பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியைச்சேர்ந்த பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பினர் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், எதிர்ப்பை வெளிப்படுத்த சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (21.12.2024) உடையான்பட்டி ரயில்வே கேட் அருகில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சாலையின் உடனடி மதிப்பீடு செய்து, சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுப்பது, திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் அளிப்பது, சாலை புதுப்பிப்பு செய்யப்படும் என உறுதி அளிப்பது, பேருந்து சேவை தொடர நடவடிக்கை எடுக்க உறுதி அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த கே.கே.நகர் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியப்பிறகு இன்று தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டிருக்கின்றது. இதுதொடர்பாக சாலை மறியல் செய்தவர்கள் மீது கே.கே.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
முன்னதாக, திருச்சி காஜாமலைப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி அப்பகுதி மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு மேயர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் சாலை மறியல் கைவிடப்படும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மேயர் அன்பழகன் சாலை மறியல் செய்யப்பட்ட பகுதிக்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில், பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனகூறினார். அதன்பின்பு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. ஒரே காவல் எல்லைக்குட்பட்ட 2 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் போலீஸார் திணறினர். மேலும், சாலை மறியல் செய்த கவுன்சிலர் திமுகவை சேர்ந்தவர் என்பதும், ஆளுங்கட்சி கவுன்சிலரே ஆளும்கட்சி மேயரை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“