/indian-express-tamil/media/media_files/2025/05/20/DiiyconzWqkP8inRmta7.jpeg)
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நத்தம் ஊராட்சி குறிஞ்சி நகர் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இந்த குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொட்டியம் - காட்டுப்புத்தூர் சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) செல்லதுரை மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட வேண்டும், பழுதடைந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என வலியுறுத்தினர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பொதுமக்களின் இந்த திடீர் மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.