திருச்சி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய பிரபல குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் பொறுப்பேற்ற பிறகு அதிரடி நடவடிக்கையால் திருச்சி ரவுடிகள் கலக்கத்தில் உள்ளனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன். இவரை கடந்த மாதம் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
அதன் பின்னர் திருச்சி பொன்மலைப்பட்டி அருகே உள்ள நத்தமாடிப்பட்டியைச் சேர்ந்த பட்டறை சுரேஷ் என்பவரை திருவெறும்பூர் போலீசார் பிடித்துச சென்றனர். உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டபோது பிரபல குற்றவாளியான பட்டறை சுரேஷ் என்ற ரவுடியிடம் எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பினர்.
அதன் பின்னர் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கணபதி நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி பாட்டில் மணி என்ற தினேஷ்குமார் (வயது 30) என்பவரை மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்து திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், தான் திருந்தி வாழ விரும்புவதாகவும், ஆனால் தன்னை காவல்துறையினர் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளனர். அப்படி ஏதாவது நேர்ந்தால் தமிழக காவல்துறையே அதற்கு பொறுப்பு என பாட்டில் மணி பரபரப்பு ஆடியோ வெளியிட்டு அது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் திருவெறும்பூர் செல்வபுரத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் விஷ்ணு என்கிற வெங்கடேஷ் (வயது 29) என்ற ரவுடியை திருவெறும்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர் மீது வழிப்பறி அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் திருச்சி மேலகல்கண்டார் கோட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்த சசிகுமார் (39) என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்தனர்.
இதுகூறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, சூப்பர் மார்க்கெட்டில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சசிகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு, பணம் கொடுக்க மறுத்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என அரிவாளைக் காட்டி மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், கைதான வெங்கடேசை போலீசார் திருச்சி 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருவெறும்பூர் பகுதியில் தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு கொள்ளவும் பிரபலங்கள் கைது செய்யப்பட்டு வருவது ரவுடிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“