திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருச்சி மாநகர காவலர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வுக்கூட்டம் மாநகர காவல் ஆணையர் நா.காமினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர்கள் பி.சிபின், டி.ஈஸ்வரன் மற்றும் காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மாநகர காவல் ஆணையர் நா.காமினி, காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் போலீஸார் கனிவாக நடந்துக்கொள்ள வேண்டும். அவர்களின் புகார்கள் மீது முகாந்திரம் இருந்தால் உடனடியாக விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
கஞ்சா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும். தத்தம் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் ஏதும் நடைபெறா வண்ணம் தீவிரமாக கண்காணிப்பு செய்வதும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சாதி மற்றும் மத ரீதியாக எழும் பிரச்சனைகளின்போது காவல் உயர் அதிகாரிகள் சம்பவ இடம் சென்று மோதல்களை தடுத்து உடனடியாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், காவல் நிலையங்களில் பதிவு ஆகி நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை முடித்து, குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். காவல் நிலையங்கள் காவல் குடியிருப்புகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் முறையாக விசாரணை செய்தும் வழக்குப்பதிவு செய்ய முகத்திரால் வழக்கு பதிவு செய்யவும், இல்லையெனில் புகார் மனுவிற்கு ரசீது வழங்கி விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகர காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, இந்த மாதாந்திரக்கூட்டத்தில் மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திறம்பட செயல்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அந்தவகையில் அரியமங்கலம் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் அரியமங்கலம், பால்பண்ணை பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு சுமார் 422 கிலோ மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றி, வாகனங்களை பறிமுதல் செய்து யாருக்கும் சமரசமாகாமல் வழக்குப்பதிந்தமைக்காக அவரைப்பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
அதேபோல உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்தும், லாட்டரியில் பணம் விழுந்தவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் மிரட்டி வந்த பிரபல லாட்டரி அதிபர்களை சமரசமின்றி கைது செய்து வழக்கு பதிந்தமைக்காகவும் அவரைப்பாராட்டி அவருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் மாநகர காவல் ஆணையர் நா.காமினி.
க.சண்முகவடிவேல்