scorecardresearch

திருச்சியில் அதகளம் செய்த யூடியூபர் அசார்: தட்டித் தூக்கிய போலீஸ் வழக்குப் பதிவு

இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிச் சென்று சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடும் பைக் ரேஸ் யூடியூபர் அசார் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Trichy
Trichy

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் அசார். நேற்று (மே 17) மாலை திருச்சி நீதிமன்றம் அருகே காவல்துறை அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுடன் ஊர்வலமாக சென்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பைக் ரேஸ் யூடியூபர் அசார் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் மேற்கொள்ளும் சாகச பயணம் பார்ப்போரை பதற வைக்கிறது. ரேஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தடுக்க போலீசார் கடிவாளம் போட்டாலும், அவர்கள் கண்களை மறைத்து இரவு நேரங்களில் சாலையில் தீப்பொறிகளை பறக்கவிட்டவாறு நடத்தும் சாகசங்களால் பலர் உயிரையும் பறிகொடுத்துள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக திருச்சியிலும் இரவு நேரங்களில் பைக் ரேஸ் சம்பவம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தின் மத்திய மாவட்டமான மலைக்கோட்டை மாநகர் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து தினம் ஒரு விபத்துகள் நடந்து வருகிறது. அதே நேரம், கொரோனாவுக்கு பிறகு இன்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் பலரும் யூடியூப் லைவ், பேஸ்புக் லைவ், சமையல், நடனம், டிராவல், வீட்டு மொட்டை மாடியில் காய்கறி செடிகள் வளர்ப்பது, பைக் சாகசத்தில் ஈடுபடுவது வரை காணொளி காட்சிகளாக பதிவிட்டு பலரின் கவனத்தை ஈர்ப்பதோடு கணிசமான வருவாயும் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் திருச்சியை பூர்வீகமாக கொண்ட அசார் என்பவர் இருசக்கர வாகனத்தை அசாத்தியமாக ஒட்டி லைக்குகளை அள்ளி வருகிறார். இவர் வைத்திருக்கும் 1000 RR வகை இருசக்கர வாகனத்தின் விலை ரூ.20 லட்சம் என்பதால் இளைஞர்களின் ஆதரவு இவருக்கு அதிகம் உண்டு. யூடியூப்பில் 1.20 லட்சம் பேர் இவரை பின்தொடர்கின்றனர். இவரது யூடியூப் பக்கத்தில் இளைஞர்கள் பட்டாளத்தோடு அதிவேகமாக பைக் ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை தொடர்ந்து அசார் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இந்த நிலையில், முன்கூட்டியே தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளம் மூலம் திருச்சி வருவதை அறிவித்த அசார், குறித்த நேரத்தில் விலை உயர்ந்த பைக்குடன் வந்தார். இதனை அறிந்த ரசிகர்கள் உடனே அசாரை காண குவிந்தனர். திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலையில் தொடங்கிய பைக் ரேஸ் திருச்சி மாநகரின் பிரதான சாலை வழியாக சென்றனர். இளைஞர்களின் அலறல் சத்தத்துடன் செல்ல அவரை பின்தொடர்ந்து பைக்கில் அதிவேகமாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திருச்சி மாநகரை சுற்றியுள்ளனர்.

இதனால் திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் திருச்சி காவல்துறையினர் அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுடன் ஊர்வலமாக சென்றதாகக் கூறி அசாருக்கு ரூ. 11,000 அபராதம் விதித்தனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy police files case against youtuber azar

Best of Express