திருச்சி மாநகர் கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் ஸ்பா ஒன்று இயங்கி வந்தது. அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் ஸ்பாவில் விசாரணை நடத்தினர்.
மேலும், அதே இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகத்தை சேர்ந்த லட்சுமி தேவி என்பவரும் இரண்டு பெண்களும் இருந்தனர். இதைத்தொடர்ந்து வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்தனர். மேலும் அந்த ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு போலீசார் அவர்களை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படியுங்கள்: புதுவை வாலிபரிடம் ஆன்லைன் மோசடி : சென்னையை சேர்ந்த 3 பேர் கைது
இது தொடர்பாக ஸ்பாவின் மேலாளர் லட்சுமி தேவி கைது செய்து லட்சுமி தேவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் எனத் தெரிய வந்தது. இதையடுத்து உரிய அனுமதியின்றி ஸ்பா நடத்தியதாக உரிமையாளர் செந்தில் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஷைன் ஸ்பாவின் உரிமையாளர் செந்தில் என்பவர் தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவர் திருச்சி மாநகர் பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்த போதிலும், திருச்சி விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபட்டது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil