/indian-express-tamil/media/media_files/2025/09/04/trichy-president-droupadi-murmu-visits-srirangam-temple-received-with-full-honours-tamil-news-2025-09-04-13-07-58.jpg)
திருச்சி வருகை தந்த குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, தங்க கலசத்தில் பூரண கும்ப மரியாதை கொடுத்து குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.
திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துகொண்டார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று பகல் தனி விமானம் மூலம் திருச்சி வந்த குடியரசுத் தலைவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
திருச்சியில் இருந்து இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் திருவாரூா் சென்ற திரெளபதி முர்மு, நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக வேந்தா் ஜி. பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டமளித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி, புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், தமிழ்நாடு அமைச்சா்கள் கோவி. செழியன், கீதா ஜீவன் ஆகியோா் பங்கேற்றனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கிய அவர், "உயர் கல்வித் தரத்தைப் பேணுவதற்கும், அறிவுசார் ஆர்வத்தையும் விமர்சன சிந்தனையையும் வளர்க்கும் ஒரு தூண்டுதல் சூழலை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் சிறப்புப் பாராட்டுக்குத் தகுதியானது. விரிவாக்கக் கல்வி மூலம் சமூகத்தின் பரந்த பிரிவினருக்கு கற்றலின் நன்மைகளை இந்தப் பல்கலைக்கழகம் விரிவுபடுத்தி வருவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய நிகழ்ச்சியில் 3ல் 2 மடங்கு பெண்கள் பட்டம் பெற்றது எனக்கு பெருமையாக உள்ளது" என்றார்.
அந்நிகழ்ச்சிக்கு பின்னர் திருவாரூரில் இருந்து ஹெலிகாப்டரில் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்த கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் புறப்பட்டார். அவரது வருகையையொட்டி ஜனாதிபதியைக் காண சாலையின் இருபுறமும் மக்கள் குவிந்தனர்.
அதனைக் கண்ட அவர், காரை நிறுத்தச் சொல்லி அதிலிருந்து இறங்கி வந்து அங்கு தன்னைக் காண காத்திருந்த பொதுமக்களிடமும், குழந்தைகளிடமும் நலம் விசாரித்தார். பின்னர் குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கி அங்கிருந்து புறப்பட்டு இரவு 7 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி கிளம்பி சென்றார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று திரும்பும்போது, கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் காரில் இருந்து இறங்கி, தன்னைக் காண காத்திருந்த பொதுமக்களிடமும், குழந்தைகளிடமும் நலம் விசாரித்தார். பின்னர் குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கினார்.@rashtrapatibhvnpic.twitter.com/1N1W74c1vk
— PIB in Tamil Nadu (@pibchennai) September 3, 2025
இந்தியாவின் முதல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு, தனது எளிமையான அணுகுமுறையால் அனைவரையும் கவர்ந்தார். அவரது வருகையின்போது, தமிழ்நாடு அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் உரிய மரியாதைகளுடன் அவரை வரவேற்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தங்க கலசத்தில் பூரண கும்ப மரியாதை கொடுத்து குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.