திருச்சி சிறையில் தையல் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கைதி
திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள்ளேயே ஒரு பெண்ணை தண்டனைக் கைதி ஒருவர் மானபங்கம் செய்த சம்பவம் சிறைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
தமிழ்நாட்டின் முக்கியச் சிறைச்சாலைகளில் திருச்சி மத்திய சிறைச்சாலையும் ஒன்று. இந்தச்சிறைச்சாலை சுமார் 2500 நபர்களை அடைக்கும் அளவிற்கு 250 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருக்கின்றது. இங்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும், அயல்நாடுகளில் இருந்தும் குற்றச்செயல்களில் ஈடுபட்டோர், வழக்கில் தண்டனைப்பெற்று தண்டனையை அனுபவிக்கும் குற்றவாளிகள் என சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
Advertisment
இந்தச்சூழலில் திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள்ளேயே ஒரு பெண்ணை தண்டனைக் கைதி ஒருவர் மானபங்கம் செய்த சம்பவம் சிறைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த விபரம் வருமாறு;
திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் தொழில் கல்வி படிப்பதற்காக ஒரு சிறு ஐ.டி.ஐ. ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த ஐ.டி.ஐ.யில் தையல் ஆசிரியை ஒருவர், 'போக்சோ' தண்டனை கைதியால் கொடூரமாக மானபங்கம் செய்யப்பட்டதை, சிறை அதிகாரிகள் மூடி மறைத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
திருச்சி மத்திய சிறையில் செயல்பட்டு வரும் ஐ.டி.ஐ.யில் கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற திருமூர்த்தி என்பவர் உட்பட 35 தண்டனை கைதிகள் தையல் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைதிகளுக்கு, 45 வயதுடைய தையல் ஆசிரியை ஒருவர் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 1-ம் தேதி காலையில் வழக்கம்போல் வகுப்புகள் தொடங்கின. கைதிகளும் தையல் பயிற்சியினை மேற்கொண்டிருந்தனர். நண்பகல் உணவு இடைவெளிக்காக சிறிது நேரம் பயிற்சி நிறுத்தப்பட்டிருந்தது.
கைதிகள் உணவு இடைவெளிக்கு சென்றிருந்த நேரம், தையல் ஆசிரியை மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்திருக்கின்றார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கோவை போக்ஸோ கைதி திருமூர்த்தி என்பவர் வேகமாகவே சாப்பாட்டை முடித்துக்கொண்டு மற்ற கைதிகள் வரும் முன்பே வகுப்பறைக்கு வந்தார். அங்கு தனியாக இருந்த தையல் ஆசிரியையின் வாயில் துணியை வைத்து அமுக்கி அவர் சத்தம் போட விடாமல் செய்தார்.
பின்னர் தனது முழுபலத்துடன் அவரை அடக்கி ஆவேசமாக முத்தம் கொடுத்து, உதடுகளை கடித்து காயப்படுத்தியிருக்கின்றார். பின்னர், அவரது நெஞ்சுப்பகுதியிலும், முகத்திலும் கடித்து, நகங்களாலும் காயங்களை ஏற்படுத்தினார்.
அதிர்ச்சியடைந்த ஆசிரியை, திருமூர்த்தியிடம் இருந்து விடுபட்டு, தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் அவரை நோக்கி குத்திவிடுவேன் என ஆவேசமாக திரும்ப, அந்தக் கைதி, ஆசிரியையை தன் பிடியில் இருந்து விட்டு விட்டு, குளியல் அறையில் சென்று ஒளிந்துக் கொண்டார்.
சிறைக்குள்ளேயே தன்னை ஒரு கைதி மானபங்கம் செய்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம், புகார் கொடுக்கச் சென்ற ஆசிரியையிடம், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், 'இதனால் உங்களுக்குத் தான் கெட்ட பெயர், அசிங்கம். அப்படியே விட்டு விடுங்கள்' என மிரட்டல் தொனியில் கூறினார். அங்குள்ள பெண் அதிகாரியும் ஆசிரியைக்கு ஆறுதல் கூறாமல், புகார் கொடுக்கக் கூடாது என்பது போல மிரட்டியிருக்கின்றார். இதனால், மனமுடைந்த ஆசிரியை, அங்கிருந்து சென்று விட்டார்.
பல்வேறு குற்ற பின்னணி கொண்ட ஆண் கைதிகளுக்கு, வகுப்பு எடுக்கச் செல்லும் பெண் ஆசிரியைக்கு, உரிய பாதுகாப்பு அளிக்காமல் சிறைத்துறை மெத்தனமாக இருந்துள்ளது. மேலும், தண்டனை கைதியின் குற்றச் செயலை மறைக்கும் விதமாக, சிறை அதிகாரிகள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் ஆசிரியையை மிரட்டியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் திருச்சி சிறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. க.சண்முகவடிவேல்