திருச்சி ரயில்வே கோட்டத்தில் 4 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ஆக. 6ஆம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள 500 ரயில் நிலையங்களை அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி மேம்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பித்து, அதற்கான அடிகல்லையும் நாட்டியுள்ளார்.
இதில் தென்னக ரயில்வேயில் உள்ள 25 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “இந்திய ரயில்வே தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதில் குறிப்பாக நவீன மயமாக்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு மூன்று ரயில் நிலையங்கள் அதிகப்படியான மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் மத்திய பிரதேசத்தில் உள்ள ராணிகமலாபதி, பெங்களூர் விஸ்வரேஸ்சய்யா ரயில் நிலையம், குஜராத் காந்திநகர் ரயில் நிலையம் ஆகியவை நவீன மயமாக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 1309 ரெயில்கள் நவீன மயமாக்கப்பட உள்ளன. அதில் திருச்சி கோட்டத்தை பொறுத்தவரை 15 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன. அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், காரைக்கால், மன்னார்குடி, திருப்பாதிப்புலியூர், சிதம்பரம், அரியலூர், திருவண்ணாமலை, விருத்தாச்சலம், வேலூர், கண்டோன்மென்ட், போளூர், லால்குடி ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 6ஆம் தேதி இந்த அம்ரித்பாரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட அளவில் 4 ரயில் நிலையங்கள் ணைக்கப்படுகின்றன.
அதில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகியவை இணைக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையங்கள் அனைத்திலும் வெளிநாடுகளில் இருப்பது போல் மேம்படுத்தப்பட உள்ளோம்.
நகரின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையிலும், ரயில் நிலையங்களின் கட்டிடங்களை மேம்படுத்தி மறு வடிவமைப்பு செய்தல், நவீன வசதிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், பயணிகளின் வழிகாட்டுதலுக்கான சைன் போர்டு அமைக்கப்படவிருக்கின்றது.
நம்ம ஊரின் கலாச்சாரம் பண்பாட்டை குறிக்கும் வகையில் கட்டிடங்கள் வடிவமைக்கப்படவிருக்கின்றன. முதல் கட்டமாக பிரதமர் மோடி 508 ரயில் நிலையங்களுக்கு பணிகளை தொடங்கி வைக்கிறார். திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 15 ரயில் நிலையங்களுக்கு 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 18 ரயில் நிலையங்களும், கேரளாவிற்கு 5 ரயில் நிலையங்களும், கர்நாடகாவில் ஒன்றும், புதுச்சேரியில் ஒன்றும் என மொத்தம் 25 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
அதில் புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு மட்டும் ரூ.93 கோடி செலவில் மேம்படுத்தப்படவிருக்கின்றது. இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டு ஆறு முதல் ஏழு மாதத்திற்குள் அவை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இந்தச் சந்திப்பின்போது வணிக பிரிவு மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“