திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி பிரபல தொழிலதிபர், எம்.டி என அரசியல் மற்றும் அரசு அதிகாரிகளால் அழைக்கப்பட்ட ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி திருச்சி - கல்லணை சாலையில் காவிரி ஆற்றுப்படுகையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் ஆண்டுகள் கழித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தும் இந்த வழக்கு முடிவுக்கு வரவில்லை. ஸ்ரீரங்கம் போலீசார் இந்த வழக்கு குறித்து முதலில் விசாரணை நடத்தினர். பின்னர், சிபிசிஐடி போலீசாரும், சிபிஐ-யும் விசாரணை நடத்தியது. ஆனால் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாததால் கடந்த 2022-இல் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கில் துப்பு துலங்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை சூப்பிரண்டு மதன், சி.பி.ஐ. அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு கடந்த சில வருடங்களாக தீவிர விசாரணை நடத்தி, டெல்டா மாவட்ட ரவுடிகள் உள்பட பலரும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். 2023- ல், 12 சந்தேக நபர்கள் பாலிகிராஃப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், ஆனால் இதுவும் வழக்கை முடிவுக்கு கொண்டுவரவில்லை.
இதனிடையே கடந்த மார்ச் மாதம், சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார், தஞ்சை எஸ்.பி. ஆகியோரை கூடுதலாக நியமித்து புலன் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தற்போது திருச்சி துணைத் தலைமைக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, பாளையங்கோட்டை மத்திய சிறையில் 10 ஆண்டுகளாக தண்டனை கைதியாக உள்ள விசாரணை கைதி சுடலைமுத்துவிடம் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடமிருந்து முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமஜெயம் கொலை செய்யப்பட்ட காலக்கட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் தொழிற்பயிற்சிக்காக சுடலைமுத்து சென்றிருந்ததாக தெரிகிறது.
அப்போது ராமஜெயம் கொலை தொடர்பாக மற்றொரு கைதியுடன் அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணையில், கைதியின் அறிக்கைகள் மற்றும் முந்தைய சந்தேக நபர்களுடனான தொடர்புகள் ஆய்வு செய்யப்படுகின்றன. கே.என்.நேரு குடும்பத்தினர், திமுக ஆட்சியில் உண்மை வெளிவரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
13 ஆண்டுகளைக் கடந்தும் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் அடையாளம் காணப்படாததால் இந்த வழக்கு எப்போது முடிவுக்கு வரும்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் மத்தியில் உருவாகி உள்ள நிலையில், டிஐஜி வருண்குமார் தலைமையிலான குழு, புதிய தடயங்களை ஆராய்ந்து வழக்கை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறது. இந்த விசாரணை, ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
க.சண்முகவடிவேல்