/indian-express-tamil/media/media_files/2025/01/07/tOgJHJr9MGzh84XjVrKI.jpeg)
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசினார்.
இந்த நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் ஐபிஎஸ் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி நீதிபதி பாலாஜி முன்பு நேரில் ஆஜராகிய வருண்குமார் இந்த வழக்கு குறித்து தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
இதற்கிடையே வருண்குமாருக்கு டி.ஐ.ஜி யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு அவர் திருச்சி சரக டி.ஐ.ஜி யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த வழக்கு விசாரணை மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக வருண்குமார் நீதிமன்றத்திற்கு நேரில் வருகை தந்தார். வருண்குமார் சார்பில் இருவர் சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகி அவர்கள் தங்களுடைய வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து மீண்டும் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வருண்குமாரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும்போதே சீமான், மீண்டும் மீண்டும் டி.ஐ.ஜி வருண்குமார் குறித்து தரக் குறைவாக பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளோம்,
சீமானுக்கு அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லை. ஐ.பி.எஸ் என்பது மிகவும் உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் குறிப்பிட்டு விமர்சித்து பேசுகிறார். ஐ.பி.எஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வி தகுதி இருக்கிறது? இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம்.
டி.ஐ.ஜி வருண்குமார் சார்பில் இரண்டு பேர் சாட்சியம் அளித்தபோது சாட்சிகளை நீதிபதி பாலாஜி விசாரித்தார். அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற நிலையில் மீண்டும் வழக்கு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து, திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 4 நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
டி.ஐ.ஜி வருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லாத பொழுதும் ஒரு புகார்தாரராக அவர் அனைத்து வழக்கு விசாரணையின் போதும் நேரில் வருவதாக தெரிவித்து அதன் அடிப்படையில் இன்று அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார் என தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.