74-வது குடியரசு தின விழா இன்று (ஜனவரி 26) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய கொடி ஏற்றப்பட்டு, அணிவகுப்புகள், கலை நிகழ்ச்சிகள் என உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
திருச்சி மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் அரசு சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆட்சியர் பிரதீப் குமார் மூவர்ணக் கொடியை ஏற்றி, வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டார். அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
அதைத் தொடர்ந்து, முதல்வரின் குடியரசு தின காவலர் பதக்கங்களை 98 பேருக்கு வழங்கினார். பின்னர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 301 பேருக்கு நற்சான்றிதழை வழங்கி கௌரவித்தார். அந்தவகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒலி பிரிவில் பணிபுரிந்து வரும் செல்வமணி, சிறப்பாக பணிபுரிந்தமைக்கான நற்சான்றிதழை பெற்றார். செல்வமணி திருமணம் முடிந்த கையோடு, மணப்பெண்ணுடன் வந்து மணக்கோலத்தில் விருது பெற்றார்.
மணக்கோலத்தில் வந்த தம்பதிக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இரட்டிப்பு வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/