/indian-express-tamil/media/media_files/2025/10/06/trichy-rid-muruganandam-m-businessman-to-compete-in-thiruverumbur-constituency-2026-assembly-election-tamil-news-2025-10-06-16-18-30.jpg)
"2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் எனது மண், என்னோட ஊர் என்பதால் நான் மீண்டும் திருவெறும்பூரில் போட்டியிடப் போகிறேன்." என்று எக்ஸெல் குழும சேர்மன் எம்.முருகானந்தம் தெரிவித்தார்.
திருவெறும்பூர் அருகே கணேசபுரம் பகுதியில் உள்ளது எக்ஸெல் குழுமம். இதன் கீழ் சுமார் 12க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் பன்னாட்டு அளவில் இயங்கி வருகிறது. இதன் சேர்மனாக இருந்து வருபவர் பொறியாளர் எம்.முருகானந்தம். இவர் ரோட்டரி சங்கத்தின் பன்னாட்டு இயக்குனராகவும், திருச்சி ட்ரேட் சென்டர் சேர்மன் ஆகவும் இருந்து வருகிறார். கடந்த காலத்தில் இவர் மக்கள் நீதி மையம் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து பணியாற்றி வந்தார்.
இதனை அடுத்து கடந்த சட்டமன்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு கணிசமான அளவில் வாக்குகளை பெற்றார். வாக்காளர்களிடத்தில் இவரது அணுகுமுறையும் வாக்குறுதியும் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது. பின்னர் கட்சியில் இருந்து வெளியேறி விட்டார்.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த எம்.முருகானந்தம், "நான் அரசு பள்ளியில் பயின்றுதான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஒரு மனிதனுக்கு 2 விசயம் தேவைப்படுகின்றது. ஒன்று ஆசைப்படுதல், மற்றொன்று அதிலிருந்து மகிழ்ச்சி கிடைக்குதா என்பதுதான். வாழ்க்கையை இரண்டு பாதியாக பிரிக்கலாம், ஒன்று பாராட்டு பெருவது, மற்றொன்று பாராட்டை இழப்பது. வாழ்க்கையை இரண்டா பிரிச்சிட்டா ரொம்ப மகிழ்ச்சியா போகும். தெரிந்தோ தெரியாமலோ நமது வரலாறு மறைக்கப்பட்டிருக்கின்றது. 8 தலைமுறைகளுக்குப் பிறகு யாரும் இந்த உலகத்தில் வாழ்ந்து விடவே முடியாது என்கிறது வரலாறு. எனவே, நாம் இருக்கின்ற நேரத்தில் மகிழ்ச்சியை பிறருக்கு கொடுப்போம், மகிழ்ச்சியாய் இருப்போம்.
இன்னைக்கு நடக்கக்கூடிய விசயங்களை உற்றுநோக்கினோம் என்றால், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே சரியான தலைவர்கள் ரொம்ப, ரொம்ப கம்மிங்கறதை தான் இன்றைக்கு நடக்கக்கூடிய பல்வேறு சம்பவங்கள் உணர்த்துகின்றன. வாழ்க்கையின் சந்தோசத்திற்கு அடிப்படை வெற்றி மட்டுமல்ல, வெற்றியுடன் சேர்ந்த மகிழ்ச்சி. ஆனால், திருச்சி என்பது மிகப்பெரிய பவர் சிட்டி, கல்வியில் சிறந்த மாநகரம். இங்கு அனைத்து வசதிகளும் இருக்கு. இந்த நேரம் தமிழகத்தின் தலைநகரமாக திருச்சியை மாற்றியிருக்கனும், அது ஏன் இன்னும் மாறல, மாத்த முடியலன்றது தெரியல. அதை கேக்கவும் இங்க யாரும் இல்ல.
திருச்சியில் இருந்து எங்கப்போனாலும் 300 கிலோ மீட்டர்ல பிற மாநிலங்களையும், பிற வர்த்தக நகரங்களையும், கப்பல் துறைமுகங்களையும் சென்றடைய முடியும் வகையில் தமிழகத்தின் மையப்பகுதியாக திருச்சி இருக்கின்றது. அதனாலதான் சொல்றேன், திருச்சியை நம் மாநிலத்தில் தலைநகரமாக்கவேண்டும் என்று. இந்திய அளவில் டாப் த்ரில 3-வது இடமாக திருச்சி இருக்கின்றது. திருச்சியிலிருந்து சரியான லீடர்கள் இங்கிருந்து உருவாகல, அதனாலதான் இன்னைக்கு நாம் தமிழகத்தின் தலைநகரமாக திருச்சியை உருவாக்க தவறிவிட்டோம். அதனால், வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் எனது மண், என்னோட ஊர் என்பதால் நான் மீண்டும் திருவெறும்பூரில் போட்டியிடப் போகிறேன்." என்று அவர் கூறினார்.
சமூக ஆர்வலராகவும், ரோட்டரி மூலம் பல்வேறு நலத்திட்டங்களையும் தொடர்ந்து செய்து வரும் முருகானந்தம் பல்நோக்கு புற்றுநோய் மருத்துவ மையத்தை திருவெறும்பூர் தொகுதியான துவாக்குடி புறவட்ட சாலையில் அமைத்து வருகின்றார். இந்த புற்றுநோய் மருத்துவமனை அடுத்தாண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளது. இதனை அடுத்து அவரது ஆதரவாளர்கள் வாழ்த்துகளை முருகானந்தத்திற்கு தெரிவித்தனர். இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் வேளையில் இவரது முதல் போட்டி அறிவிப்பு அரசியல் கட்சியினர் இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.