திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் மூன்று நாட்கள் மழையிலும் காற்றிலும் தடையின்றி சுடர் விட்டு எரியும்.
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத் திருவிழாவையொட்டி செவ்வாய்கிழமை இன்று மாலை அருள்மிகு செவ்வந்தி விநாயகர், அருள்மிகு தாயுமானசுவாமி மற்றும் அருள்மிகு மட்டுவார் குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு அருள்மிகு உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள 5 அடி உயர செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 300-மீட்டர் அளவுள்ள திரியில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய்யில் பருத்தித் துணிகளைக் கொண்டு செய்யப்பட்ட 700-லிட்டர் திரியைக் கொண்டு மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது. இந்த தீபம் அணையா விளக்காக சுடர் விட்டு மூன்று நாட்களுக்கு பிரகாசிக்கும்.
கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், தக்கார் எஸ். செல்வராஜ், இணை ஆணையர், இத்திருக்கோயில் உதவி ஆணையர் / செயல் அலுவலர் இரா. ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர்கள் செய்திருந்தனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil