திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஏலூர்பட்டியை அடுத்த குண்டுமணிப்பட்டியைச் சேர்ந்த வேதாச்சலம்-கல்பனா தம்பதியருக்கு சிந்துஜா, சஹானா ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வேதாச்சலம் தச்சுவேலை செய்து வருகிறார். இவரது மனைவி விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
வேதாச்சலத்தின் மகள்கள் இருவரும் குண்டுமணிப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் ஒருவர் 3 ஆம் வகுப்பும் ஒருவர் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த 14-ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாட சென்ற சஹானா வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடினார்கள். எங்கு தேடியும் கண்டுப்பிடிக்க முடியாததால் என்ன செய்வதென்று தெரியாது நண்பர்கள், உறவினர்களிடம் தெரிவித்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 14-ம் தேதி குண்டுமணிப்பட்டியில் புதிய பால்வாடிக் கட்டிடம் கட்ட கடந்த வெள்ளிக்கிழமை ஜே.சி.பி இயந்திரம் மூலம் சுமார் 12 அடி ஆழத்தில் அகன்ற குழித்தோண்டப்பட்டுள்ளது. இந்தப் பால்வாடி கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட குழியின் அருகே பொதுமக்கள் குடியிருப்பு அமைந்துள்ளது.
மேலும் குழந்தைகள் மையம் ஒன்றும் சுமார் 2 அடி தூரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் குழியில் நேற்று முன்தினம் பெய்த மழை நீர் குழியே தெரியாமல் தேங்கி இருந்து வந்துள்ளது. இந்த குழியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சஹானா எதிர்பாராத விதமாக அதில் விழுந்து இருக்கலாம் எனக்கருதி சிலர் தேடினர்.
/indian-express-tamil/media/post_attachments/5196d223-175.jpg)
குழி ஆழமாக இருந்ததாலும், மழை நீர் தேங்கி இருந்ததால் நீரில் மூழ்கி சஹானா இறந்து விட்டதை கண்டு பிடித்தனர். உடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சஹானாவை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சஹானாவை பரிசோதித்த மருத்துவர் சஹானா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
பின்பு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பால்வாடி அமைக்க தோண்டப்பட்ட குழியில் பச்சிளம் குழந்தை விழுந்து இறந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பால்வாடி அமைக்க தோண்டப்பட்ட குழியின் மிக அருகில் குழந்தைகள் மையம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால், அந்தப்பகுதியில் குழந்தைகள் அதிகம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தடுப்புகள் வைத்திருந்தால் ஒரு பச்சிளம் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“