/indian-express-tamil/media/media_files/2025/09/21/trichy-fraud-group-facebook-loan-2025-09-21-18-57-15.jpeg)
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள புறத்தாக்குடியைச் சோ்ந்த வி. ஆரோக்கியசாமி என்பவா் தனது முகநூலில் கேபிட்டல் பைனான்ஸ் - லோன் என்ற விளம்பரத்தைப் பார்த்து அதிலிருந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மறுமுனையில் ஆசை வார்த்தை கூறி லோன் எடுப்பதற்கு விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆவணக் கட்டணம் ரூ.1 லட்சம் வேண்டும் என தெரிவித்ததால் உடனடியாக ரூபாய் 1 லட்சம் அனுப்பினார். இருப்பினும் கடன் தொகையை அவர்கள் விடுவிக்காமலும், ஆரோக்கியசாமி அனுப்பிய பணத்தையும் திருப்பித் தராமலும் இழுத்தடித்துள்ளனர். இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆரோக்கியசாமி திருச்சி மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஆரோக்கியசாமி அளித்த புகாரின்பேரில் திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட ஆய்வாளர் சுமதி தலைமையிலான தனிப்படை போலீஸாரும் விரைவாக விசாரித்தனர். முகநூலில் பழகி ஏமாற்றியவா்களின் கைப்பேசி எண்களை ஆய்வு செய்ததில், அவர்கள் திருப்பூரில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்று திருப்பூர் புதூர் பிச்சம்பாளையம் எஸ். ஸ்ரீனிவாசன், அதே பகுதியைச் சேர்ந்த ஜோ. கணபதி, இவரது மனைவி கவிதா ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் மோசடிக்கு பயன்படுத்திய 10 கைப்பேசிகள், 1 மடிக்கணினி, 1 மோடம், 10 சிம் கார்டுகள், வங்கிக் கணக்கு புத்தகங்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்ட திருச்சி எஸ்.பி. செல்வநகரத்தினம், துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த தனிப்படையினரை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.