திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தனிப்பட்ட புகாரை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "சீமான் என்னையும், எனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியும், தனிப்பட்ட விதத்தில் மிரட்டியும் வருகிறார்.
இதனால் நான் உள்பட எனது குடும்பத்தினர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம். இவ்வாறு அவதூறு தகவல்களை பேசி வரும் சீமான் ரூ. 2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும். அவர் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக வரும் 30-ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் எஸ்.பி வருண் குமார் நேரில் ஆஜராகி தமது வாக்குமூலத்தை பதிவிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி எஸ்.பி. வருண்குமார் வரும் 30-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி தமது வாக்குமூலத்தை பதிவு செய்கிறார்.
இதனால் நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் சீமானுக்கும் நீதிமன்றம் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவரும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாக தெரிகிறது.
இது தொடர்பாக, எஸ்.பி வருண் குமாரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் பல்வேறு தகவல்களை அளித்துள்ளார். "திருச்சி எஸ்.பி வருண்குமார் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் அவதூறான கருத்துகளை பேசி வந்த சீமானிற்கு விளக்கம் கேட்டு ஏற்கனவே வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த வக்கீல் நோட்டீஸ்க்கு சீமான் பல்வேறு விபரங்களை 15 பக்கத்துக்கு மேல் அனுப்பினார்.
அதில் எங்கள் தரப்பில் இருந்து கேட்கப்பட்ட கேள்விக்கு விளக்கம் அளிக்காமல், திசை திருப்பும் வகையில் பதில்கள் இருந்தன. அதனால் தான் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
எஸ்.பி வருண்குமார் அளித்த இந்த மனு மீதான விசாரணை நேற்று (டிச 27) வந்தது. மனுவை பரிசீலனை செய்த நீதிபதி பாலாஜி, இதனை நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வழக்கு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்பேரில், வரும் 30-ஆம் தேதி திருச்சி எஸ்.பி வருண்குமார் நேரில் ஆஜராகி தன்னுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அடுத்த கட்டமாக சீமான் நேரில் ஆஜராக நீதிமன்றம் மூலமாக சம்மன் அனுப்பப்படும். அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வழக்கு விசாரணை முடிவடைந்த பின் நீதிபதி உத்தரவிடுவார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்த அனைத்தும் ஆவணமாக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடர்பான விவரங்கள் சீமானுக்கு விரைவில் அனுப்பப்பட்டு, அவரை நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை பிறப்பிக்கப்படும்.
நேர்மையான அதிகாரியாக சமூகத்தில் நன்மதிப்புடன் உள்ள எஸ்.பி வருண்குமார் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
செய்தி - க.சண்முகவடிவேல்