/indian-express-tamil/media/media_files/2025/08/21/trichy-srirangam-fire-accident-aug21-2025-08-21-20-43-30.jpeg)
ஸ்ரீரங்கம் நரியன் தெருவில் 6 வீடுகளில் ஒரே நேரத்தில் தீ பற்றியதால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே திருவானைக்காவல் நரியன் தெருவில் தங்கமணி, ஆறுமுகம் பாண்டியன், சூர்யா ஆகியோர் அடுத்தடுத்த குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பூ தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்கமணி வீட்டில் இன்று மதியம் திடீரென தீப்பற்றியது. இந்த தீ அருகில் இருந்த வீடுகளுக்கு பரவியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தங்கமணி வீட்டிலிருந்து வெளியே வந்து கூச்சலிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கியராஜ் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். மேலும் வீடுகளில் இருந்த 3 எரிவாயு சிலிண்டர்களில் கசிவு ஏற்படுவதை கண்ட தீயணைப்பு வீரர்கள் அந்த சிலிண்டர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள வாய்க்காலில் வீசி அசம்பாவிதம் ஏற்படுவதை தவித்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும், இவர்களுக்கு எதிர்புறத்தில் வசிக்கும் வீரமணி என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனம் எரிந்து சேதமானது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அனைவரும் வேலைக்கு சென்று இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், இந்த தீ விபத்து குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்து ஏற்பட்ட அடுத்த நிமிடமே மின் வினியோகம் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.