திருச்சி திருவானைக்கோவில் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் பத்மநாபன் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து இன்று ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது;- ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதிகளில் வசிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் காவேரி பாலத்தை கடந்து சென்று கல்வி பயின்று வருகின்றனர். மேலும் அன்றாட பிழைப்புக்காக தினசரி கூலி வேலை செய்பவர்களும், குடும்பத் தலைவிகளும், பெண்களும், இளைஞர்களும் தினசரி பணிக்கு செல்ல காவேரி பாலத்தை கட்டாயமாக கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-21-at-16.43.40-2.jpeg)
இதையும் படியுங்கள்: கும்பகோணம் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் மூலம் காவிரி பாலத்தில் உள்ள தார் சாலைகளை அகற்றிவிட்டு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சீரமைப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் ஓரமாக இரு சக்கர வாகனங்கள் கடந்து செல்வதற்கு வழி விடப்பட்டது. இப்போது பாலத்தை முழுமையாக மூடிவிட்டார்கள். இதனால் மாணவ மாணவிகள் கல்லணை ரோடு வழியாக ஓயாமாரி சுடுகாடு வழியாக அண்ணா சாலையை கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.
எனவே மாம்பழச் சாலையில் இருந்து அண்ணா சாலைக்கு செல்வதற்கு பழைய காவிரி இரும்பு பாலத்தினை திறந்து, இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதித்தால் பள்ளி கல்வி தடைப்படாமல் இருக்கும். அது மட்டுமல்லாமல் பாலம் அடைக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-21-at-16.43.40.jpeg)
அதேபோல், வாகன நெரிசலால் நீண்ட நேரம் காத்திருப்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு மிகவும் தாமதமாக செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அரையாண்டு, முழு ஆண்டு பொது தேர்வுகளில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் சூழ்நிலை உள்ளது. ஆகவே பழைய காவிரி இரும்பு பாலத்தை திறந்து அதில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தார்.
இதேபோல், பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் தெரிவிக்கையில்; ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் சென்று வரும் வாகன ஓட்டிகள் அனைவரும் காவிரி பாலம் மூடப்பட்டதால் திருச்சி- சென்னை பைபாஸ் சாலைக்கு சென்று கும்பகோணத்தான் சாலையை பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-21-at-16.43.39.jpeg)
இந்த கும்பகோணத்தான் சாலையின் பெரும்பாலான இடங்கள் ஆட்கள் நடமாட்டமில்லாத காவிரி கரையோர பகுதியாகும். மேலும் தெரு விளக்குகள் அதிகம் எரியாததால் வழிப்பறிகள் அதிகம் நடக்க வாய்ப்புள்ள அச்சமிகுந்த குறுகிய சாலையாக அமைந்துள்ளது.
ஆகவே, இரவு பகல் பாராது மக்கள் இருள் சூழ்ந்த கும்பகோணத்தான் சாலையை பயன்படுத்திடும் சூழல் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அப்பகுதியிலேயே தற்காலிக காவல் நிலையம் ஒன்று அமைக்க வேண்டும். மேலும், இரவு முழுவதும் அதிகளவிலான காவல்துறையினரை பைபாஸ் முதல் திருவானைக்கோவில் பாலம் வரை தொடர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபடுத்தி மக்கள் அச்சமின்றி கும்பகோணத்தான் சாலையில் பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகின்றோம்.
அது மட்டுமின்றி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பரிந்துரைத்து கும்பகோணத்தான் சாலையில் முழுமையாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்திடவும், நாய்களை கட்டுப்படுத்திடவும் வேண்டும் எனத் தெரிவித்தார்.
காவிரி பாலம் முற்றிலுமாக முடப்பட்டதால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil