அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் ரூ.6.18 கோடியில் மேம்படுத்தி, புனரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
திருச்சி தெற்கு ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அமிர்த் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.6.18 கோடியில் மேம்படுத்தி, புனரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
ரயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த தற்போது உள்ள ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளன.
ரயில் நிலைய நுழைவு வாயில், பயணிகள் காத்திருப்பு அறை, நவீனமயமாக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள், டிக்கெட் கவுண்ட்டர்கள் போன்றவை புதுப்பிக்கப்பட இருக்கிறது.
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில் தூய்மைப்படுத்தி, ரயில் நிலையம் முகப்பு தோற்றம் அழகாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டு, தற்போதுள்ள முனைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, புதிய நுழைவு வாயில் கட்டப்படுகிறது.
இதில் சிறப்பு அம்சமாக ரயில் நிலைய முகப்பு தோற்றத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாதிரி வடிவம் உருவாக்கப்படுகிறது.
மேலும் ரயில் நிலையம் முன்பு செல்பி பாயிண்ட் அமைக்கப்படும். பயணிகளின் பயன்பாட்டிற்காக புதிய கழிவறைகள் கட்டப்படும். பயணிகள் பிளாட்பாரம், பெஞ்சுகள், கூடுதல் தண்ணீர் குழாய்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளது.
ரயில் பயணிகளின் வசதிக்காக கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் உருவாக்கப்படும். இந்த திட்டம் மூலம் அனைத்து பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தெற்கு ரயில்வே கவனம் செலுத்துகிறது.
இதில், ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும்.
/indian-express-tamil/media/media_files/h3zmJfWztTssWf9fK0Ri.jpeg)
குறிப்பாக, நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவுவாயில்கள் சீரமைப்பு, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பார்க்கிங் வசதி, சிசிடிவி கேமரா, வை ஃபை வசதி, இயற்கைக் காட்சிகள், தோட்டம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும்.
இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படும் வகையில் ரயில் நிலைய நுழைவு வாயிலில் நன்கு வடிவமைக்கப்பட்ட சரிவுகள் அமைக்கும் பணிகளுக்கான முதற்கட்ட பணிகள் துவங்கியிருக்கின்றது.
ரயில் நிலையத்தில் குறைந்த மின் சக்தியை பயன்படுத்தும் வகையில் ரயில் நிலைய கட்டிடங்கள் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்தப்படும். ஸ்ரீரங்கம் ரயில் நிலைய கட்டிடம் நவீனமயமாக வடிவமைக்கப்படவுள்ளது.
இந்த மாற்றம் இந்திய பன்முகத்தன்மையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும். மேலும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம், இன்னும் பல ஆண்டுகள் அழியாத ஆன்மிக ஸ்தலத்தின் அடையாளமாகவும் இருக்கும்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“