தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சியில் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை, நேற்று இரவு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் மாணவர்கள் நடத்தினர். தகவல் அறிந்த போலீசார் போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்று மாணவர்களைக் கைது செய்தனர். இந்தக் கைதை கண்டித்து பதற்றமான சூழல் நிலவியது.
மேற்கொண்டு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அனைவரும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். ஆனால் மண்டபத்திற்குள்ளே மாணவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் மாணவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலினால் 4 மாணவர்களுக்கு எலும்பு முறிந்து பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகக் கர்நாடக பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
பின்னர் மாணவர்கள் அடைக்கப்பட்டுள்ள இடத்திற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் விரைந்தார். போராட்டம் நடத்திய மாணவர்கள் 400 பேர் மீதும், அரசு மருத்துவமனை காவல்நிலையம், உறையூர் காவர் நிலையம், தில்லைநகர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் தில்லைநகர் மற்றும் ஜி.எச். காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 17 பேரை, திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திருநாவுக்கரசர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது 3 பேருக்குச் சிறையில் அடைக்கும் வயதல்ல என்றும் இதனால் மீதமுள்ள 12 பேரையும் 20ம் தேதி வரை திருச்சி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கூடுதலாக 5 பேர் நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது, அந்த 5 பேரும் நீதிபதியிடம் காவல்துறை மீது குற்றச்சாட்டு கூறினர். அதில், “பேருந்துகள் கண்ணாடியை உடைத்தவர்களை அடிக்காமல் சம்பந்தப்படாத எங்களைக் கடுமையாக தாக்கினார்கள். காயமடைந்த எங்களை இதுவரை மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்லவில்லை. நாங்கள் எங்களின் உரிமைக்காகப் போராடுகிறோம். ஆனால் போலீஸ் எங்களை ரவுடி போல் நடத்துகிறார்கள்” என்று குற்றம் சாட்டினர். அப்போது அவர்கள் அனைவரும் தங்களின் ஆடையைக் கழற்றி காயங்களை நீதிபதியிடம் காட்டினர். இந்தக் காயங்களை பார்த்து நீதிபதி அதிர்ச்சியில் உறைந்து போனார்.
பின்னர் மாணவர்களின் குற்றச்சாட்டுகளையும் நீதிபதி குறித்துக் கொண்டார். காயப்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி அளிக்குமாறு நீதிபதி கூறினார்.