Tangedco Assistant Engineer (AE) arrested in Trichy for taking a bribe of Rs 15,000 Tamil News
Trichy Tamil News: திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் பாலு என்பவருக்கு ஸ்ரீரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டை கிராமம், ஜெயராம் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி கொடுத்துள்ளார். அந்த வீட்டிற்கு குடியிருப்புக்கான மின் வசதியும் (Domestic) பெற்றுக் கொடுத்துள்ளார். பிறகு பாலு அந்த குடியிருப்பினை வியாபார தளங்களுக்கு வாடகைக்கு விட நினைத்து குடியிருப்புக்காகப் பெற்ற மின் இணைப்பினை வணிக பயன்பாட்டுக்கு மாற்றி தரும்படி கட்டிட ஒப்பந்ததாரர் வெங்கடேசனிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பேரில் ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கடந்த ஜனவரி மாதத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள சிந்தாமணி பிரிவில் கொடுத்துள்ளார்.
Advertisment
விண்ணப்பம் அளித்து மூன்று மாதங்களாக எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஒப்பந்ததாரர் வெங்கடேசன் சம்மந்தப்பட்ட சிந்தாமணி பிரிவுக்கான உதவி இளநிலைப் செயற்பொறியாளர் ராஜேஷ் என்பவரை கடந்த 17ம் தேதி காலை சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் 20 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மின் இணைப்பின் முறையை மாற்றம் செய்து தருவதாக கூறியுள்ளார். பின்னர் ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கேட்டுக் கொண்டதன் பேரில் 5 ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்ட உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் ரூ.15 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பினை மாற்றம் செய்து தர இயலும் என்று கராராகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் வெங்கடேசன், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் அலுவலகத்தில் இதுதொடர்பாக நேரடியாக வந்து புகார் அளித்துள்ளார். ஒப்பந்ததாரர் வெங்கடேசனின் புகாரைப் பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரொக்கம் வெங்கடேசனிடம் கொடுக்கப்பட்டது.
Advertisment
Advertisements
மின்வாரிய உதவி இளநிலைப்பொறியாளர் ராஜேஷ் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக ரசாயனம் தடவிய அந்த நோட்டுகளை இன்று 20ம் தேதி காலை 11.10 மணியளவில் வெங்கடேசனிடம் இருந்து பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, தமிழக அரசின் மின்வாரிய அலுவலக வழிகாட்டுதலின்படி, மின் இணைப்பு மாற்றம் செய்வதற்கான அரசு கட்டணம் ரூ.400 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil