திருச்சியில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களில் மிக முக்கியமானது திருவெறும்பூர் சார்-பதிவாளர் அலுவலகம். இங்கு நாள்தோறும் பல நிலங்கள் பத்திரப் பதிவு செய்யும் பணிகள் நடைபெறுகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மீது அடிக்கடி லஞ்சப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சியைச் சேர்ந்தவர் அசோக்குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் பாப்பாக்குறிச்சி பகுதியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளார். இதற்காக அசோக் திருவெறும்பூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் மேற்படி நிலத்தை முறையாக பத்திரப் பதிவு செய்ய அணுகியுள்ளார். தான் வாங்கவிருக்கும் விவசாய நிலத்திற்கு சந்தை மதிப்பாக ரூ. 1 லட்சம் நிர்ணயம் செய்து பத்திரப் பதிவு செய்ய அலுவலகம் சென்றுள்ளார். அப்போது, சார்-பதிவாளர் பாஸ்கரன் மேற்படி நிலத்தினை அரசு மதிப்பீட்டின்படி சதுர அடி மதிப்பில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும், நிலத்தை விவசாய நிலமாக 47 (A) படி பத்திரப் பதிவு செய்ய 1 லட்சம் ரூபாய் லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அசோக்குமார் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி மணிகண்டனை சந்தித்து புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின் படி இன்று அசோக்குமார் சார்-பதிவாளர் பாஸ்கரனை சந்தித்து 1 லட்சம் ரூபாய் லட்சப் பணம் கொடுத்த போது, அதைப் பாஸ்கரன் பெற்ற போது போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி பரிந்துரை செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறையின் திடீர் ரெய்டு திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil