திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மதுராபுரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 7000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் 100 நாட்கள் வேலையை நம்பி குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்து இருப்பதாக தெரிகிறது.
இதனை அடுத்து மதுராபுரி ஊராட்சிக்குட்பட்ட சித்திரைப்பட்டியில் சுமார் 2400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருபவர்கள் அதிகளவு விவசாயத்தையும், ஊராட்சியில் வழங்கும் 100 நாள் வேலையையும் நம்பி தாங்கள் வாழ்வதாகவும், தங்களை துறையூர் நகராட்சி உடன் இணைத்தால் பல்வேறு நிலைகளில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
சித்திரைப்பட்டி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த 6 ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதனை நினைவு கூறும் வகையிலும், தை பொங்கலை முன்னிட்டு அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி, தோரணங்கள் கட்டி தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.
சித்திரைப்பட்டியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இல்லையென்றால் அடுத்தடுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.