/indian-express-tamil/media/media_files/2025/09/23/trichy-2025-09-23-13-05-32.jpeg)
Trichy
துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக திறந்துவைத்த புதிய வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் தப்பிய நிலையில், இந்த விபத்து தொடர்பாக இரண்டு இளநிலைப் பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 34 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், சுமார் 30.50 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது. இந்த வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்கு பிறகு திங்கட்கிழமை பள்ளிக்கு வந்த மாணவர்கள், புதிய வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நல்லவேளையாக, விடுமுறை நாட்களில் இந்த விபத்து நடந்ததால், மாணவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முசிறி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கனகராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜசேகரனிடம் இது குறித்து விசாரணை நடத்தினார்.
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கங்காதாரிணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த விபத்து தொடர்பாக துறையூர் ஒன்றிய இளநிலைப் பொறியாளர்கள் பெரியசாமி, தங்கராசு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இளநிலைப் பொறியாளர் கலைச்செல்வராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டிட ஒப்பந்ததாரரை கருப்புப்பட்டியலில் சேர்க்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.