துவாக்குடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ரியல் எஸ்டேட் தரகரை வெட்டியதாக பிரபல ரவுடியின் மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த ரியல் எஸ்டேட் தரகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவெறும்பூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் புரோக்கர் பணம் தராத நிலையில் ஏற்பட்ட மோதலில் பிரபல ரவுடியின் மகன்கள் வெட்டியதில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு பெரியார் மணியம்மை நகரை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மகன் முகமது ஷரீப் (35) இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆகவும், வாகனங்கள் வாங்கி விற்கும் புரோக்கர் ஆகவும் வேலை பார்த்து வந்தவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்து உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த செல்வம் என்ற ஒரு ஆன்லைன் சூதாட்டக்காரரோடு தினமும் இரவு எட்டு மணி அளவில் சூதாட்டத்தில் ஈடுபட்டதில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரூ.43 ஆயிரத்தை முகமது ஷெரிப் இழந்தார். அதன் பிறகு கடந்த நாலைந்து நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு அதை மீட்டெடுக்க நினைத்தவர் மீண்டும் ரூ.50,000 இழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் செல்வத்திற்கு ரூ 93 ஆயிரம் கடனாளி ஆனார்.
இந்தநிலையில் அந்த பணத்தை செல்வத்திடம் கொடுக்காமல் முகமது ஷெரிப் இழுத்தடித்ததால், செல்வம் இது குறித்து அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சாத்தையனின் மகன் கார்த்திக்கிடம் பணத்தை வாங்கி தர கூறியுள்ளார். இதனை அடுத்து கார்த்திக் (45)முகமது ஷெரீப்பிடம் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பணத்தை செல்வத்திடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனால் முகமது ஷெரிப்பிற்கும் கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு கைகலப்பாகி உள்ளது.
இந்த நிலையில் கார்த்திக் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். முகமது ஷெரீப் தனது நண்பர்கள் 4 பேருடன் கார்த்திக் வீட்டிற்கு சென்று தகராறு செய்தபோது கார்த்திக் மற்றும் அவரது அண்ணன் காளிதாஸ் ஆகிய இருவரும் வீட்டிலிருந்த அருவாளை எடுத்து முகமது ஷெரிப்பை 9 இடங்களில் சர மாறியாக வெட்டியுள்ளார்.
இதைப் பார்த்த முகமது ஷெரீப் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முகமது ஷெரிப்பை மீட்டு துவாக்குடி போலீசார் துவாக்குடி அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்கும் பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முகமது ஷெரீப் நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து அடிதடி வழக்காக பதியப்பட்ட இவ்வழக்கில் கார்த்திகையும் அவரது அண்ணன் காளிதாசையும் துவாக்குடி போலீசார் கொலை வழக்கில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் சிவக்குமார் என்ற நபரையும் வேறொரு நபரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது துவாக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்