திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவணசெல்வம் (39). சொந்தமாக வாடகை கார் நிறுவனம் நடத்தி வந்த இவருக்கு லாவண்யா என்கிற மனைவியும் ஒரு மகன், மகளும் உள்ளனர். இதனிடையே சரவண செல்வத்துக்கும் அவரது டிராவல்ஸ் அருகில் தையல் கடை வைத்திருக்கும் பெண் ஒருவருக்கும் சில வருடங்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் அதிகரிக்க இருவரும் நெருக்கமாக பழகி வந்திருக்கின்றனர். இது இரண்டு குடும்பத்திற்கும் தெரிந்தே நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்கள் இருவரும் தொடர்பை துண்டித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் சரவணசெல்வம் அந்த பெண்ணுக்கு சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் கொடுத்துள்ளதாகவும், பிரிந்த பிறகும், சரவணசெல்வத்திடம் மேலும் பணம் கேட்டு அந்த பெண் தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பணம் தராத நிலையில், தன்னுடன் சரவணசெல்வம் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து அந்த பெண் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை சரவணசெல்வத்தின் அறை கதவு வெகுநேரமாக திறக்காததை கண்டு சந்தேகமடைநத மனைவி லாவண்யா கதவைத் திறந்து பார்த்தபோது அங்கு சரவண செல்வம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வருவதற்கு முன்பே கணவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை பார்த்த மனைவி லாவண்யா அதை போலீசாரிடம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் தன் மரணத்திற்கு அந்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் காரணம் என்றும், மேலும் தனலட்சுமிக்கு ஆதரவாக தன் மீது பொய் வழக்கு போடும் ஸ்ரீரங்கம் உளவுத்துறை ஏட்டு திருமுருகன், எழுத்தர் முத்துசாமி, உதவி ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர்தான் என்று கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஸ்ரீரங்கம் காவல் துறையினர் சரவணசெல்வத்தின் தற்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil