'ரோஜ்கார் மேளா' எனும் வேலைவாய்ப்பு மேளா மூலம் 70,000-க்கும் மேற்பட்டோருக்கு அரசு வேலைக்கான பணிநியமன ஆணையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று (ஜூன் 13) காலை வழங்கினார். பின்னர் புதிதாக பணியில் இணைந்திருப்போர்களிடம் உரையாற்றி பேசினார் பிரதமர் மோடி. அந்த வகையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மத்திய அரசு ரோஜ்கர் மேளா என்ற 6-வது வேலை வாய்ப்பு விழா நடைபெற்றது.
இதில் வங்கிகள், கஸ்டமஸ், இரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஒலிபரப்பு துறை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் மேடையில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:-
கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவில் ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாத பிரதமர் மோடி அறிவித்தார். தற்போது இந்த 1 வருடத்தில் மட்டும் 4.20 லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு வழங்கி உள்ளார். மீதம் வேலை வாய்புகள் விரைவில் வழங்கப்படும் என்றார். பாஜக மற்றும் கூட்டணியில் உள்ள அனைத்து மாநிலத்திலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
Advertisment
Advertisements
அந்தவகையில் இன்று திருச்சியில் பணி நியமன ஆணையை பெறும் நம்முடைய இளைஞர்கள், வரும் தலைமுறைகளை வழிநடத்தும் அதிகாரிகளாக இருக்க வேண்டும். மேலும், இன்று மட்டும் இந்தியா முழுவதும் 45 இடத்தில், 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. தொடர்ந்து மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு கடந்த 9-ஆண்டுகளில் மகத்தான சாதனை செய்து வருகிறது. நெடுஞ்சாலை துறை, விமான நிலையம் கட்டமைப்பு, இந்தியாவின் டெக்ஸ்டைல்ஸ் துறையில் பெரும் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வரும்போது மெட்ரோ ரயில் திட்டமானது 5 நகரங்களில் இருந்தது. தற்போது 27 நகரங்களில் மெட்ரோ ரயில் செயல்படுகிறது.
ஏழைகளின் அரசாக பாஜக செயல்படுகிறது. குறிப்பாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்றி வருகிறோம். வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 80 கோடி பேருக்கு ரேஷன் கார்டு மூலம் அரிசி, பருப்பு வழங்கப்படுகிறது. புதிய தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கொள்கையானது சர்வதேசத்துக்கு இணையாக கல்வி கொள்கையாக உள்ளது.
1 லட்சம் புதிய startup நிறுவனம் துவங்கப்பட்டு இந்தியா 5 - வது பொருளாதார நாடாக உயர்ந்த உள்ளது. ரஷ்யா, உக்ரேன் போருக்கு இடையே 23 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் அழைத்து வரப்பட்டது என நிறையவே செய்து வருகின்றது பாஜக அரசு. ராணுவ தளவாடம் இறக்குமதி செய்து வந்த நாம், தற்போது தொழிற்சாலை ஆரம்பித்து நாம் ஏற்றுமதி செய்கிறோம்.
கடந்த ஆட்சியில் 1 ரூபாய் திட்டத்தில் பயனாளர்களுக்கு 15 பைசா செல்கிறது என கூறப்பட்டது. இதனை மாற்றும் விதமாக குட்கவர்ஸ் என்ற அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு நேரடியாக பயனாளர்களுக்கு திட்டம் சென்றடைகிறது. குறிப்பாக அடுத்த 25 ஆண்டுகள் நாம் அனைவரும் இணைந்து நாடு முன்னேற செயல்படுவோம்" இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பல்வேறு துறைகளில் பணியில் சேர உள்ள இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பணி நியமனம் பெறுவதற்க்காக தமிழகத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த 200க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மத்திய அரசு அதிகாரிகள் ராமலிங்கம், ரியாஸ்குல்கர் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil