/indian-express-tamil/media/media_files/2025/04/20/4157P9JUFRrs2ctEwOrc.jpeg)
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட, உறையூர் மின்னப்பன்தெரு, பனிக்கன்தெரு, காமாட்சி அம்மன் தெரு, நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தி.மு.க வார்டு கவுன்சிலரிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூன்றரை வயது பெண் குழந்தை பிரியங்கா மற்றும் லதா என இருவர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மருதாம்பாள் என்ற பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், மாநகராட்சி அதிகாரிகளோ, அமைச்சரோ இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் பிரட், பரோட்டா உள்ளிட்டவைகளை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு உடனே நின்று விடும் என அலட்சியமாக பதிலளித்ததுடன், மெத்தனப்போக்குடன் அலட்சியமாக செயல்பட்டு வருவதாகக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணன் இந்த குற்றச்சாட்டுக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், உறையூர் பகுதியில் உள்ளுர் கோவில் திருவிழாக்கள் தொடர்ந்து ஒரு மாதமாக நடைபெற்று வந்ததினால் அதிகமான மக்கள் அப்பகுதியில் கூடியதாலும், தொடர் அன்னதானம், வழங்கும் நிகழ்ச்சி நிறைய நடைபெற்றது. அதனால் வழங்கப்பட்ட உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டதன் மூலம் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
மேலும் குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஆங்காங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்காலிகமாக மாநகராட்சி குடிநீர் வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக தகவல் பரவி வருவது உண்மை அல்ல. பொதுமக்கள் வீதி அடைய வேண்டாம் என என மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இச்செய்தியை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தெரிவிக்கையில்; எங்கள் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பகுதி மாமன்ற உறுப்பினர் முத்துக்குமாரிடம் முறையிட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை, இதனால் குடிநீரில் கழிவு நீர் கலந்து வரும் நிலை நீடிக்கின்றது. இதனாலேயே உறையூரில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் மறுக்கின்றனர். கவுன்சிலர் முத்துக்குமாரின் அலட்சிய போக்காலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. முறையான குடிநீர், முறையான சாக்கடை வசதி, கொசுத்தொல்லை இவைகளை சரி செய்ய தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளோம், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் உள்ளோம் என்று தெரிவித்தனர்.
இந்தநிலையில், திருச்சி அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாநகராட்சி துணை மேயருமான ஜெ. சீனிவாசன் அப்பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று தனது ஆறுதலை தெரிவித்தார். மேலும், உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் பேசுகிறேன் என உறுதி கூறியுள்ளார்.
முன்னதாக, திருச்சி உறையூரில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதேநேரம் மாநகராட்சி இவர்களின் இறப்புக்கு குடிநீர் காரணம் அல்ல என மறுப்பு தெரிவித்தாலும், உறையூரில் பெரும்பாலான பொது மக்களுக்கு வயிற்றுப்போக்கு தொடர்வதும், நேற்று இரவு முதல் உறையூரில் சில இடங்களில் பிற பகுதியினரை அனுமதிக்க காவல்துறை மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.