திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவரும், தொழில் அதிபராகவும் இருப்பவர் சேகர் ரெட்டி. இவரது மகளுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக உள்ள தர்மா ரெட்டியின் மகன் சந்திரமவுலிக்கும் (வயது 27) சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இருவருக்கும் வருகிற ஜனவரி 26-ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் நடத்தி வைப்பதாகவும் இருந்தது. மாப்பிள்ளை சந்திரமவுலி திருமண அழைப்பிதழை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று கொடுத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 18-ம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து, கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட சந்திரமவுலி இன்று (டிசம்பர் 21) காலை 8.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சந்திரமவுலி மரணம் இருவீட்டார் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/