பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள், ஆனால், சர்ச்சைக்கு பேர்போன யூடியூபர் டி.டி.எஃப் வாசன், தான் வளர்க்கும் மாலைப்பாம்பை கழுத்தில் மாலை போல போட்டுக்கொண்டும், அந்த மலைப்பாம்புக்கு முத்தம் கொடுத்தும் வீடியோ வெளியிட்டார். இந்த மலைப் பாம்பை சென்னையில் வாங்கியதாகவும் தெரிவித்தார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் தமிழ்நாடு வனப்பாதுகாப்புச் சட்டப்படி வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து, வனத்துறையினர் சென்னையில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் கடையில் சோதனை நடத்தினர். அதே நேரத்தில், மலைப் பாம்பை வளர்த்த டி.டி.எஃப் வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல்கள் எழுந்தன.
தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்ட வழிகாட்டுதல்களின்படிதான், டி.டி.எஃப் வாசன் மலை பாம்பை வைத்திருந்ததாக அவருடைய வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
டி.டி.எஃப். வாசன் மலைப் பாம்பு வைத்திருப்பது குறித்து, அவருடைய வழக்கறிஞர், தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்ட வழிகாட்டுதல்களின்படிதான், டி.டி.எஃப். வாசன் மலை பாம்பை வைத்திருந்ததாக விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள செல்லப்பிராணி கடையில் இருந்து மலைப்பாம்பு வாங்கப்பட்டதாகவும், அதற்கான சான்றிதழ் செல்லப்பிராணி கடை உரிமையாளரால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி வழங்கப்பட்ட உரிமம், குடியேற்றச் சான்றிதழ் மற்றும் தடையில்லா சான்றிதழ் ஆகியவை தகுதிவாய்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும், அதிகாரிகள் சம்மன் அனுப்பினால் எந்த தயக்கமும் இல்லாமல் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“