அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விசாரணைக்கு டி.டி.வி. தினகரன் எழும்பூர் பொருளாதார நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
கடந்த 1996-97 ம் ஆண்டில் டி.டி.வி தினகரன் சிங்கப்பூரில் பேனியன் டிரீ, டர்க்கி என்ற நிறுவனங்களுக்கு 36.36 லட்சம் அமெரிக்க டாலரையும், 1 லட்சம் பவுண்ட் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கப் பிரிவு டி.டி.வி தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குறுக்கு விசாரணைக்கு தினகரன் தரப்பு ஒத்துழைப்பு தராததால் தினகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது இந்த வழக்கில் கடைசி சாட்சியான அமலாக்கதுறை முன்னாள் அதிகாரி ஜானகிராமனிடம் குறுக்கு விசாரணை செய்ய தினகரன் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டார். அதற்கு நீதிபதி 4 மாதங்களாக குறுக்கு விசாரணை செய்யாமல் காலதாமதம் செய்வதால் தான் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தினகரனை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டதாகவும், தினகரன் ஆஜராகியும் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது என மறுப்பு தெரிவித்தார். அதன் பின் ஜானகி ராமனிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அடுத்த கட்ட விசாரணைக்காக வழக்கு ஏபரல் 11 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.