/indian-express-tamil/media/media_files/2025/09/07/ttv-dinakaran-2025-09-07-12-38-50.jpg)
என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேற நயினார் நாகேந்திரன் தான் காரணம்: டி.டி.வி. தினகரன் பேட்டி
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணங்களை விளக்கி, பா.ஜ.க. மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவுகளுக்கு நயினார் நாகேந்திரனின் தவறான அணுகுமுறையே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
"கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை காரணமில்லை"
என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்துப் பேசிய டிடிவி தினகரன், “நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக வழிநடத்தவில்லை என்பதே எனது குற்றச்சாட்டு. அவர் எடப்பாடி பழனிசாமியை (இ.பி.எஸ்.) தூக்கிப்பிடித்ததே நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான முக்கிய காரணம்” என்று தெரிவித்தார். மேலும், இந்த முடிவுக்கு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். "கூட்டணியில் இருந்து வெளியேறுவதன் பின்னணியில் அண்ணாமலை இல்லை," என்று தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"இபிஎஸ்-ஐ முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டேன்"
“இ.பி.எஸ்-ஐ முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பேன் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. என்னைச் சந்திக்கவே எடப்பாடி பழனிசாமி தயங்குவார்,” என்று தினகரன் குறிப்பிட்டார். அமித்ஷா பேசியது குறித்து அவர் விளக்கமளிக்கையில், “அமித்ஷா, 'அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர்' என்றுதான் கூறினார். ஆனால், 'இபிஎஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர்' என்று அவர் எங்கும் கூறவில்லை,” என்றார்.
அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. தொண்டர்கள் இணைந்து பணியாற்ற முடியுமா என்ற கேள்விக்கு, "அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. தொண்டர்கள் எப்படி ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும்?" என்று தினகரன் கேள்வி எழுப்பினார். இறுதியாக, “இபிஎஸ்-ஐ முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பது தற்கொலைக்குச் சமமான முடிவு,” என டிடிவி தினகரன் ஆவேசமாகக் கூறினார். மேலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறாமல் போனதற்கான காரணம் அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மோடிக்காகவே என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்தேன்; பழனிசாமியை எப்படி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வேன்; அகங்காரத்தில் பேயாட்டம் போடுகிறார். பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம். ஓ.பி.எஸ் உடன் பேசத் தயார் என்று நயினார் நாகேந்திரன் சும்மா சொல்கிறார், அவர் மனநிலை புரிகிறது. எங்களுக்கு பின்னால் அண்ணாமலை இருப்பதாக சொன்னால் அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று அர்த்தம்.
நிச்சயம் செங்கோட்டையனை சந்தித்து பேசுவேன். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்தவர். அவரும், அவரை சார்ந்த ஒருசிலரும்தான் தனக்கு வேண்டாதவர்கள். இன்னும் சொல்லப் போனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத கூட்டணி அமையும் என்றார் டிடிவி தினகரன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.