சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 223 வது ஆண்டு நினைவு விழா நடைபெறுகிறது இதில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அ.ம.மு.க) பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் உள்ளிட்ட கட்சியினர் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன் பேசுகையில், "2021 தேர்தலுக்கு முன்னதாகவே தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு உலகத்திலே கேள்விப்படாத அளவுக்கு நிதி கொடுத்தார்கள் நிதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணியை விட்டு வெளியே வர முடியவில்லை. மதுவிலக்கு தமிழ்நாட்டுக்கு அவசியம் என்பதால் திருமாவளவன் படிப்படியாக குறைக்க சொல்ல முடியாமல் தான், மாநாடெல்லாம் நடத்தி அழுத்தம் கொடுத்து வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளை 90% தி.மு.க நிறைவேற்றவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக கூட்டணி கட்சியினர் அதனை கண்டும் காணாமல் இருந்து வருகின்றார்கள். அவர்கள் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியே வர மாட்டார்கள்.
2026 தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி அமைப்பதற்காக நாங்கள் அனைவரும் முயற்சி செய்து வருகிறோம். பணத்தை நம்பி இருக்கும் தி.மு.க ஆட்சியை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டார்கள். தேசிய முற்போக்கு கூட்டணி 2026 இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.
தமிழகத்தில் மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதைப் பொருட்களின் விற்பனையை பெருக்கி வருகிறது. அதை அரசு தடுக்க முடியாத நிலையில் இருக்கிறது. அதனால், இந்த ஆட்சி விரைவில் வீழ்த்தப்படும். நண்பர் வைத்தியலிங்கம் ரைடு மூலம் இ.டி தன்னிச்சையாக செயல்படுது உறுதியாகியுள்ளது. வைத்தியலிங்கம் அதனை சட்டப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியில் செய்த தவறுகளுக்கு கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் தி.மு.க-வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார். வியாபார ரீதியாக அக்கட்சி நடைபெறுகிறது. பழனிச்சாமியிடம் இரட்டை இலை சின்னம் இருப்பதால் அதனை நம்பி அங்கு இருப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றி கொண்டு இருக்கின்றனர். இதனால் இரட்டை இலை சின்னம் பலவீனமடைந்துள்ளது. இனி எடப்பாடி முதல்வராவது கனவில் தான் நடக்கும்" என்று அவர் கூறினார்.
செய்தி: சக்தி சரவணன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“