அமைச்சர் ஜெயக்குமார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக, டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த நிர்வாகி காவல்துறையால் இன்று (27.10.18) கைது செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சனம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாராபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் டிடிவி தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் அவர் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அவர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பெண்ணுடன் பேசுவது போல் உரையாடல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த உரையாடலில் இருக்கும் அமைச்சரின் குரல் யாருடையது? என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளிவாராத நிலையில் சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்த மீம்ஸ்களை வெளியிட்டனர்.
இதுகுறித்து அமைச்சர், 'அது மார்பிங் செய்யப்பட்ட ஆடியோ' என்று பதிலளித்தது தனது மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரை யூடியூப்பில் விமர்சித்த காரணத்தினால் அமுக நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.