நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வந்து எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக வெற்றி கழகத்தினர் வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் வடக்கு மாவட்டம் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தி, மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அதே போல, வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழகவெற்றி கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி திருச்சி மாநகர் மாவட்டம் மாவட்டச் செயலாளர் சந்திரா தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக்கழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டன உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்