/indian-express-tamil/media/media_files/2025/09/30/vijay-karur-video-2025-09-30-15-44-59.jpg)
கருர் துயரம்: உயிரிழந்தோர் குடும்பங்களைச் சந்திக்க நடிகர் விஜய் திட்டம்
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், வரும் 15 அல்லது 17 ஆம் தேதி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்கான 16 நாள் துக்க காலம் அக்.13-ம் தேதி முடிவடைந்த பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஆறுதல் அளிக்கவும், நிதியுதவி வழங்கவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து டி.டி நெக்ஸ்ட் நாளிதழுக்குத் தகவல் அளித்த த.வெ.க மூத்த நிர்வாகி ஒருவர், "தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு முன்னர் எங்க தலைவர் கரூர் மாவட்டத்திற்குச் செல்ல முடிவெடுத்துள்ளார். நாங்க அக்.15 அல்லது 17 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் செல்வதற்கு காவல்துறை அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். காவல்துறையின் பதிலின் அடிப்படையில் இறுதி தேதி உறுதி செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
துயர சம்பவம்:
கரூர் வேலூசாமிபுரம் பகுதியில் செப்.27 அன்று த.வெ.க. தேர்தல் பிரசாரப் பேரணியின்போது, திரண்டிருந்த பெருங்கூட்டம் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இச்சம்பவம் குறித்து, வடக்கு மண்டல ஐ.ஜி. ஆஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விபத்துக்கான காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
நிவாரண உதவி:
கட்சி வட்டாரங்களின்படி, விஜய் வேலூசாமிபுரம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து, அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் நிவாரண உதவியை வழங்கவுள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் மாவட்டத் தலைவர்கள், விஜய்யின் வருகைக்காகப் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோரி கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் முறைப்படியான மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். காவல்துறையின் அனுமதி கிடைத்தவுடன் விஜய்யின் பயணத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கட்சித் தலைவர்கள் டிடி நெக்ஸ்ட் நாளிதழிடம் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த பிறகு, விஜய் பாதிக்கப்பட்டவர்களுடன் காணொலி மூலம் பேசியதுடன், வீடியோவில் விளக்கமும் வெளியிட்டிருந்தார். தற்போது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் அளிக்கவிருப்பது முதல் முறையாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.