/indian-express-tamil/media/media_files/2025/09/18/vijay-high-court-2025-09-18-14-57-09.jpg)
மதுரை த.வெ.க மாநாடு: 1.30 லட்சம் வாகனங்கள் சுங்கம் செலுத்தாமல் சென்றது - உயர் நீதிமன்றத்தில் தகவல்
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) 2-வது மாநில மாநாட்டின்போது, மதுரை-கப்பலூர்-உத்தங்குடி சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் வழியாக சுமார் 1.30 லட்சம் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்றதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் மனுவில் உள்ள தகவல்கள்
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.ஆர். ஜெயருத்திரன் தாக்கல் செய்த மனுவில், மதுரை-கப்பலூர்-உத்தங்குடி சாலை (31.2 கி.மீ.) மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.300 கோடி வரை சுங்கம் வசூலிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சாலைப் பராமரிப்பு மோசமாக உள்ளதாகவும், அரசியல், மத மற்றும் கலாச்சார அமைப்புகளின் மாநாடுகளுக்கு இந்தச் சாலை பயன்படுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தவெக மாநாட்டுக்காக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றதால், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். இது, சுங்கக் கட்டணம் செலுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அநீதி என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, கப்பலூர்-உத்தங்குடி சாலையில் அரசியல் கட்சிகள், மத அமைப்பு, திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்குவதைத் தடை செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், "குறிப்பிட்ட சாலையில் கடந்த ஓராண்டில் எத்தனை வாகனங்கள் சென்றுள்ளன, எவ்வளவு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.